கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள “சிறிமதீபாய” பிரதமர் அலுவலகம் புனரமைக்கப்பட்ட நிலையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
நினைவுக் கல்வெட்டை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அலுவலக வளாகத்தில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் பூஜை செய்த பின்னர் அடையாள ரீதியாக கடமைகளை ஆரம்பித்து வைத்தார்.
புனரமைக்கப்பட்ட அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்ட ஜனாதிபதி, அலுவலக வளாகத்தையும் பார்வையிட்டார். அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிப்பதை முன்னிட்டு தபால் அட்டையும் நினைவு முத்திரையும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத்தின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படையினர் இந்த மாளிகையை புனரமைத்துள்ளனர்.
இந்த இரண்டு மாடி மாளிகையை ஆல்பர்ட் இம்மானுவேல் டி சில்வா தனது மகன் சர் ஆல்பர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவுக்காக, 1916இல் நிர்மாணித்தார். இது, 1960ஆம் ஆண்டு அவரின் மறைவுக்குப் பின்னர் குடும்ப உறுப்பினர்களால் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டது.
கல்வி மற்றும் வானொலி அமைச்சு, உள்ளூராட்சி மன்றம் மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியன, அக்காலத்தில் சிறிமதீபாயவில் இயங்கி வந்ததோடு, 1978ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்களினால் சிறிமதீபாயவில் பிரதமர் அலுவலகம் நிறுவப்பட்டது.
நூறு வருடங்களுக்கு மேல் பழைமையான “சிறிமதீபாய”, 44 வருடங்களின் பின்னர் அதன் பழைய தோற்றத்துக்கே முழுமையாகப் புனரமைக்கப்பட்டது.
“சிறிமதீபாய” வரலாறு பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய நூல், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், முன்னாள் பிரதமர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி புகைப்படத்துக்கு தோற்றினார். பின்னர் அவர் நினைவுப் பதிவேட்டில் ஒரு குறிப்பையும் பதிவிட்டார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, முன்னாள் பிரதமர்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அல்பேர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.