மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25) காலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டு ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருவதாகவும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்ற நிலையில் பார்வீதி உப்போடையில் வீதியில் காலை 6 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.