இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் 21 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்ய நேற்றைய தினம் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டனர்.
வழக்கில் மீனவர்கள் 55 பேருக்கும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கி நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் படகின் உரிமையாளர் ஒருவரின் படகும், படகில் பயணித்தபோதும் எல்லை தாண்டுவதனை தடுக்காமை உள்ளிட்ட காரணம் சுட்டிக்காட்டப்பட்டு செல்வன்செட்டி பிரதீப் என்பருக்குச் சொந்தமான படகும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்பு பட்ட ஏனைய 7 படகுகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அரச சட்டவாதி நிசாந் நாகரத்தினம் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.