சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை சரியாக கையாள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (13.03) மாலை இடம்பெற்ற 13 வது திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அன்றாட வாழ்க்கையில் இருக்கின்ற சுமைகளைப் பற்றி பேசுகின்ற போது வவுனியா மாவட்டத்தின் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தமை ஒரு ஆறுதலையையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு இருக்கக் கூடிய நிலையில் எமது குடும்பங்களுக்கு அடுத்த நேர சாப்பாட்டை போடுவேதே ஒரு சவாலான காலகட்டம். விலை அதிகரிக்கின்ற ஒரு காலகட்டம். அனைத்து விடயங்களிலும் சுமைகள் கையை மீறி தலைக்கு மேல் அமத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாங்கள் இந்த விழிப்புணர்வு பேரெழிச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.