கைகளின் நிறம், ரேகைகளின் நிறம், விரல்களின் வடிவமைப்பு, நகங்கள் போன்றவை மனிதனின் வாழ்வில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளைக் கண்முன் காட்டும் கண்ணாடியாகின்றது.
வாழ்வில் முக்கிய அங்கமான ‘திருமணம்’ என்பதை நம் கையில் உள்ள சுக்ர மேடும், திருமண ரேகையும், செல்வாக்கு ரேகையும் நிர்ணயிக்கின்றன.
கட்டை விரலுக்குக் கீழே அமைந்துள்ள சதைப்பிடிப்பான மேட்டிற்கு ‘சுக்ரமேடு’ என்று பெயர். சுக்ர மேடானது நன்கு வளர்ச்சி பெற்று, புடைப்பாக இருந்தால் திருமண வாழ்வில் சுக போகத்திற்குக் குறைகள் இருக்காது. உடல் பலம், மன வலிமை, அன்பு, வசீகரம் ஏற்படும்.
சுக்ரமேடு நன்கு அமைந்தவர்களுக்கு, இசை, நடனம் மற்றும் பல கலைகளில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகமாகும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தி மகிழ்வர். ஆனால் இந்த சுக்ரமேடு அளவுக்கு அதிகமாகப் புடைத்து நின்றால் அவரைப் பெண் பித்தனாக அலையச் செய்யும்.
இச்சுக்ரமேடு தட்டையாக, வற்றி இருந்தால் கவலை, துக்கம், சோர்வு, கோள் சொல்லுதல், திருமணத் தாமதம் ஆகியன ஏற்படும்.
சுக்ரமேட்டில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல கோடுகள் மனிதனின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் காட்டக்கூடியதாய் அமைகின்றது. சுக்ர மேடும், சந்திரமேடும் நன்கு அமையப்பெற்றவர்களுக்குக் காதல் கைகூடும்.
சுக்ரமேட்டில் பெருக்கல் குறிதோன்றி, அதே போல் குருமேட்டில் பெருக்கல் குறிதோன்றினால், காதலில் வெற்றி பெறுவர். இல்லறமும் நன்கு அமையும். ஆனால் சுக்ரமேட்டின் அடியில் நட்சத்திரக்குறி ஏற்பட்டவர்களுக்கு காதலில் தோல்வி ஏற்பட்டு, இன்னல்கள் பல உண்டாகும்.
குருமேட்டில் சதுரம் தென்பட்டால் அமையக்கூடிய வரன் நன்கு அமையும். ஆசிரியர், விரிவுரையாளர், அரசு மற்றும் தனியார் துறையில் பெரிய பொறுப்பு வகிப்பவர்கள் இல்வாழ்க்கைத் துணைவராக வருவர்.
சுக்ரமேடு எவ்வித பழுதும் இன்றி அமைந்து புதன், சனி, சந்திர மேடுகளும் நன்கு அமைந்தால் மருத்துவம், என்ஜினீயரிங், கம்ப்யூட்டர், கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைவர்.
திருமணம், கணவன்-மனைவி உறவுகளைப் பற்றி அறிய அடுத்து நமக்குத் துணை செய்வது ‘திருமண ரேகை’ ஆகும்.
நம் கையில் சுண்டு விரலுக்குக் கீழே, உள்ளங்கையின் விளிம்பிலே இருதய ரேகைக்கு மேலாக அமைந்துள்ள, உருவத்தில் மிகச்சிறியதாக உள்ளதே திருமண ரேகையாகும்.
இது பொதுவாக மனிதர்களுக்கு ஒன்று முதல் நான்கு கோடுகள் இருக்க வாய்ப்புண்டு. எத்தனை கோடுகள் இருக்கிறதோ அத்தனை மனைவியர் உண்டு என்ற வழக்கமும் உண்டு. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். மனதில் உள்ள அன்பை வெளிப்படுத்தும் ரேகைகளாகவும் இவை அமைவதால் இதை ‘அன்பு ரேகைகள்’ அல்லது பாசரேகைகள் என்றும் அழைப்பர்.
திருமண ரேகை அமைந்துள்ள பகுதியை இருதய ரேகையிலிருந்து சுண்டு விரலின் கீழ் வரை அளந்து நான்காக பிரித்து அந்த அந்த கால அளவில் திருமண ரேகை எங்கு அமைந்துள்ளதோ அந்த வயதில் திருமணம் நடக்கும் என அறியலாம்.
இருதய ரேகைக்கு அருகில் திருமண ரேகை அமைந்தால் 19 வயது முதல் 23 வயதிற்குள் திருமணம் நடக்கும். அடுத்த மேல் பாகத்தில் அமைந்தால் 23 முதல் 30 வயதிற்குள்ளும், அதற்கடுத்து மேல் பாகத்தில் அமைந்தால் 30 வயது முதல் 35க்குள்ளும், சுண்டு விரலுக்குக் கீழே அமைந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடக்கும் என்று அறியலாம்.
உள்ளங்கை அடியினின்று தோன்றும் ஆயுள் ரேகையில் மேல் நோக்கித் தோன்றும் செல்வாக்கு ரேகைகள், எந்த வயதளவில் தோன்றுகிறதோ அந்த வயதில் திருமணம் முடியும்.
திருமண ரேகை வளைவில்லாமல் நேராக, சுத்தமாக நன்கு அமைந்தால் நல்ல மனதுக்கு உகந்த மணவாழ்வு அமையும். தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வர். திருமண ரேகை கீழ்நோக்கி வளைந்திருந்தால் இல்லறத்தில் சுகம் குறையும். மேல் பக்கமாக வளைந்திருந்தால் திருமணம் தள்ளிப்போகும்.
திருமண ரேகை இரு கிளையாய்ப் பிரிந்தால் தொழில் நிமித்தமாக கணவன் அல்லது மனைவி பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். திருமண ரேகையில் தீவுக்குறி ஏற்படுவது தீமையாகும். திருமண ரேகையில் பெருக்கல் குறி வந்தாலும் துன்பம் ஏற்படும்.
திருமண ரேகையிலிருந்து தோன்றிய ரேகை புத்தி ரேகையைத் தொட்டால் காதல் திருமணம் ஏற்படும். ஆனால் திருமணத்திற்குப் பின் சுகம் குறையும்.
திருமண ரேகையில் தீவுக் குறி கண்டால் தம்பதிகளுக்குள் யாராவது ஒருவர் நோய்வாய்ப்படுவர். சூரிய மேடும், புதன் மேடும் பலம் பெற்று திருமண ரேகை சூரிய ரேகையைத் தொட்டால் அந்தஸ்து உயர்வான இடத்தில் திருமணம் கூடி, செல்வாக்கைத் தரும். வேறு தேசத்தவரும் துணைவராக வர வாய்ப்புண்டு.
திருமண ரேகையில் கருப்புப் புள்ளிகள் இருக்கக்கூடாது. பிசிறு போன்ற அமைப்பினால் பிணி ஏற்படும். திருமண ரேகை சனி மேடு வரை சென்றால் மனைவி மூலம் பொருள் சேரும்.
சுக்கிரமேட்டின் நடுவில் முக்கோணம் தெரிந்தால் உறவில் துணைவர் அமைவார். சந்திரமேடு நன்கமைந்து அதினின்று நீண்ட ரேகை விதிரேகையைத் தொட்டால் வாழ்க்கைத் துணைவர் மூலம் நல்ல உயர்ந்த நிலை கிடைக்கும்.
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்த்து பலன் அறிய வேண்டும்.