மனித உடலில் ஏற்படும் தொற்றுக்களை வரிசைப்படுத்தினால் மூச்சுக்குழாய் தொற்று, சிறுநீரக தொற்று, ஜீரணமண்டல தொற்று ஆகியவை தான் முக்கியமானவை. சிறுநீரகத்தில் வரும் தொற்று சிறுநீரை சுமந்து வரும் குழாய், சிறுநீர் சேகரம் ஆகும் சிறுநீர்பை, தாரை இவற்றில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.
எந்த இடத்தில் தொற்று வருகிறதோ அதை பொறுத்து அந்த தொற்றுக்கு பெயர் வைக்கப்படும். சிறுநீரகத்தொற்று எல்லோருக்கும் வரும். பிறந்த குழந்தை, சிறுவர்கள், பருவ வயதுடையவர்கள், பெரியவர்கள் என்று அனைத்து வயதினருக்கும் வரலாம்.
குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் தொற்று வருகிறது. ஆண்களை விட 10 மடங்கு பெண்களுக்கு அதிகம் வருகிறது. இதற்கு இயற்கையாகவே பெண்களின் அந்தரங்க உறுப்புகள், ஆசனவாய், பிறப்புறுப்பு ஆகியவை அருகருகே அமைந்துள்ளதே காரணம்.
ஆண்களை பொறுத்தவரை அப்படி இல்லை. சிறுநீர் வெளியேறும் பகுதிக்கும், ஆசன வாய்க்கும் இடைவெளி அதிகம்.
பொதுவாக தொற்று என்பது ஆசன வாயை சுற்றித்தான் வரும். அங்கிருந்து வளர்ந்து சிறு நீர் துவாரத்தில் புகுந்து சிறுநீரகத்துக்குள் சென்று விடுகிறது.
இந்த தொற்றுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் போதும் சரி, மாதவிடாய் காலங்களிலும் சரி, பேறு காலங்களிலும் சரி மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
பெண்களை பொறுத்தவரை இயற்கையான அமைப்பு ஒரு பக்கம் என்றாலும் சமூக பிரச்சினைகளும் அவர்களுக்கு தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது.
உதாரணமாக வெளியில் எங்கு செல்லும் போதும் சிறுநீர் கழிக்க ஆண்கள் தனி இடத்தை தேடுவது இல்லை. ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அலுவலகத்தில் வேலை செய்யும் போது அடிக்கடி எழுந்து சென்றால் ஆபிசில் ஏதாவது நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவிகள், பள்ளிகளில் கழிவறை வசதி சரிவர இல்லாததால் காலையில் வீட்டில் சிறுநீர் கழித்துவிட்டு மாலை வீடு திரும்பும் வரை அடக்கி வைத்துக் கொள்வது உண்டு.
இவ்வாறு சிறுநீரை அடக்கி வைப்பது நல்ல பழக்கம் இல்லை. ஏனெனில் சிறுநீர் பையில் நீர் நிரம்பினால் வெளியேற தயாராக இருக்கும். கிட்டத்தட்ட வெல்வெட் போன்று வளவளப்பான மெல்லிய ஜவ்வால் ஆன சிறுநீர் பையில் சிறுநீரை வெளியேற்றாவிட்டால் அளவுக்கு அதிகமாக தேங்கி பலூன் போல் விரிவடையும் போது ஆங்காங்கே கண்ணுக்கு தெரியாத கீறல் விழுந்து விடும். இதன் மூலம் சிறுநீரக பையில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறி ரத்தத்தில் கலந்து விடும். எனவே தான் இப்போது கழிவறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கமே செயல்படுகிறது. இது பாராட்டுக்குரிய விஷயம்.
திருமணம் ஆனதும் புது மணப்பெண்ணுக்கு சிறுநீர் தொற்றும் அவஸ்தையும் அதிகமாக இருக்கும். அவர்களை மிக எளிதில் பாக்டீரி யாக்கள் தொற்றிக்கொள்கின்றன. திருமணம் முடிந்து முதல் இரவுக்கு பிறகு புதுமணத் தம்பதிகளுக்கு நீர்கடுப்பு, நீர் குத்தல் போன்ற பிரச்சினைகள் அவஸ்தையை ஏற்படுத்தும். இது ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ எனப்படும்.
எனவே புதிதாக திருமணம் ஆனவர்கள் உறவுக்கு பிறகு உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். உறுப்புகளையும் சுத்தமாக்கி கொள்ள வேண்டும்.
இதுதவிர கருத்தடைக்காக ஜெல், கிரீம், மாத்திரைகள் மற்றும் சாதனங்களை உபயோகிக்கிற பெண்களுக்கும் ரொம்ப எளிதாக தொற்று தொற்றிக்கொள்ளும். இது ஏன் தெரியுமா? மண்ணை வளப்படுத்த மண்புழு இருக்கிற மாதிரி நம் உடம்பிலும் வாய், பிறப்புறுப்பு, குடல் போன்ற சில பகுதிகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை ஒரு காவலாளி போல உடம்பை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றன. தீமை செய்கிற பாக்டீரியாக்களை இவை உள்ளே அனுமதிப்பதில்லை.
மேலே சொன்ன கருத்தடை சமாச்சாரங்களை உபயோகிக்கும் போது அவற்றுக்கு நன்மை, தீமை தெரியாததால் பிறப்புறுப்பின் பகுதியில் உள்ள எல்லா பாக்டீரியாக்களையும் அவை கொன்றுவிடுகின்றன.
அடுத்ததாக தொற்றுக்களை சுமந்துகொண்டு ஒரு பாக்டீரியா அந்த இடத்துக்கு வரும்போது அதை விரட்டியடிக்க அங்கே நல்ல பாக்டீரியா இருப்பதில்லை. எனவே கிருமிகள் சட்டென்று தொற்றிவிடுகின்றன. வயதான காலத்தில் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் தொற்று ஏற்படும்.
சிறுநீர் பாதையின் நுனியில் தொற்றுக்கள் காரணமாக வீக்கம், நீர் எரிச்சல், நீர் குத்தல், நீர் கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதை நுனியில் புண் ஏற்படுவதுண்டு. இதனால் அடிக்கடி சிறுநீர் போக வேண்டும்போல் தோன்றும். ஆனால் சாதாரணமாக போவது போல் சட்டென்று போகாது. சொட்டு சொட்டாக போகும்.
அடிக்கடி அடி வயிற்றை பிடித்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றும். ஒருமுறை சிறுநீர் சென்றால் முழுமையாக சிறுநீர் கழியாது. இதனால் இரவிலும் அடிக்கடி செல்ல வேண்டியது வரும்.
பொதுவாக ஆண்களுக்கு தொற்று ஏற்படுவ தற்கான வாய்ப்பு குறைவு என்பதால் முதல் முறையாக தொற்று வந்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். பாதை குறுகலாக இருக்கலாம், சதை வளர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம். எனவே இதை அலட்சியம் செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆண் குழந்தைகள் தடங்கல் இல்லாமல் சிறுநீர் கழிக்க வேண்டும். காலோடு போவது, சொட்டு சொட்டாக போவது, நின்று நின்று போவது பிரிந்து இரட்டையாக செல்வது, முக்கி போவது, போவதற்கு முன் அழுவது, சிறுநீர் வெளியேறும் இடத்தில் பலூன் போல் உப்பி தெரிவது… இவைகள் எல்லாம் தொற்றுக்கான அறிகுறிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கை குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு இருந்தால் டயப்பரில் சிறுநீர் சென்ற இடத்தில் நிறம் மாறி இருக்கும். பால் குடிக்காது. இதை வைத்து குழந்தைக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும்.
தொற்று கிட்னி வரைக்கும் பரவி விடக் கூடாது. தொற்றுகள் ஏற்பட்டால் வெறும் ஆன்டிபயாட்டிக் மாத்திரையை மட்டும் போட்டுக்கொண்டிருக்கக் கூடாது. தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் வரும்.
இதற்கு ‘யூரின் கல்ச்சர்’ பரிசோதனை செய்ய வேண்டும். பொதுவாக சிறுநீர் பரிசோதனை என்றவுடன் பரிசோதனை கூடத்தில் கொடுக்கும் பாட்டிலை வாங்கிக் கொண்டு கழிவறைக்கு சென்று ஏனோதானோவென்று சிறுநீரை சேகரித்து கொடுப்பார்கள். அது சரியான முறை அல்ல.
முதலில் சிறுநீர் செல்லும் பாதையை தண்ணீர் குழாயில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு முதலில் சிறிதளவு சிறுநீர் சென்ற பிறகு சிறுநீரை பாட்டிலில் சேகரிக்க வேண்டும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் இந்த சோதனை நடத்தினால் முடிவு சரியாக இருக்காது.