சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருக்கும்போது இரண்டுபேரும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள். அந்த நேரத்தில் ராதாரவி திடீரென கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார்.
இதனால் இருவரும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். ராதாரவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த அரண்மனையிலேயே நர்சாக தங்கி பணிபுரிந்து வருகிறார் பூனம் பஜ்வா. மேலும், ராதாரவியை குணப்படுத்துவதற்காக சூரியும், நாடி ஜோசியராக அந்த அரண்மனைக்கு வருகிறார்.
இந்நிலையில், அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது, கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால், பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக பணிபுரிந்து வரும் ராஜ்கபூர், திரிஷாவை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க, சித்தார்த் அவரை அடித்து, அரண்மனையை விட்டு துரத்துகிறார். சித்தார்த்தை பழிவாங்க குடித்துவிட்டு அரண்மனைக்கு வரும் ராஜ்கபூர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை சித்தார்த் தான் கொலை செய்துவிட்டார் என்று போலீசார் சித்தார்த்தை கைது செய்கிறது.
இதையடுத்து, அரண்மனையில் நடந்த சம்பவங்களுக்கு தீர்வுகாண திரிஷா தனது அண்ணன் சுந்தர்.சிக்கு போன் செய்து அரண்மனைக்கு வரவழைக்கிறார். அரண்மனைக்கு வரும் சுந்தர்.சி., அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடிவு செய்கிறார். இறுதியில், அவற்றையெல்லாம் சுந்தர்.சி., கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சித்தார்த் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் பேயின் அடக்குமுறைக்கு பயந்தவாறு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முறைப்பெண்ணாக வரும் திரிஷா, முதல் பாதியில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். பிற்பாதியில், ஆவி புகுந்த பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.
இரண்டாம் பாதியில் வரும் ஹன்சிகா அழகாகவும், அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். சூரி-கோவைசரளா-மனோபாலா கூட்டணியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம். பூனம் பஜ்வா முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தன்னை வித்தியாசப்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுந்தர்.சிக்கு படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். சந்திரமுகி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் போன்றது இவருடையது. அதை அழகாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். ராதாரவி தனக்கே உரித்தான வில்லத்தனம், பாசமுள்ள அப்பா என தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார்.
அரண்மனை படத்தைப் போன்றே இப்படத்தையும் திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி., முதல்பாதி முழுக்க திகில் மற்றும் காமெடியுடன் இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் கலந்து திகிலும் கொடுத்திருக்கிறார். முந்தைய பாகத்தை விட இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதை திரையில் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் ஹிட்டாகிவிட்டாலும், பெரிய திரையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் ‘அரண்மனை 2’ மிரட்டல்.