இங்கிலாந்தில் பிறந்த அமினா ஹார்ட் என்ற பெண் தனது இளமைக் காலத்திலேயே அவுஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று இங்கு வாழ்ந்து வருகிறார்.
தனக்கு நடந்த இருவேறு திருமணங்களின் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயான அவரால் தாய்மை உணர்வை மட்டுமே அடைய முடிந்ததேயொழிய, பிறந்த இரு குழந்தைகளும் சிறுவயதில் இறந்துப்போக தனிமை அவரை வருத்தி, வாட்டியது.
இரு கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்துவந்த அமினா, மூன்றாவது குழந்தையை திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட வகையில் பெற்றெடுக்க விரும்பினார்.
இதற்கான ஏற்பாட்டை செய்ய பிரபல செயற்கை கருத்தரிப்பு மையம் முன்வந்தது. தனக்கு விந்து தானம் அளிக்க முன்வந்தவர்கள் பலரில் ஸ்காட் ஆன்டர்சன் (45) என்பவரை தனது விந்து கொடையாளியாக அமினா தேர்வு செய்தார். வெற்றிகரமாக முடிந்த அந்த செயற்கை கருத்தரிப்பின் விளைவாக லைலா என்ற அழகிய பெண் குழந்தையை அமினா பெற்றெடுத்தார்.
லைலாவை பெற்றெடுக்க உதவிகரமாக இருந்த நபரிடம் தனக்கு பிறந்த அழகிய குழந்தையை காட்டி மகிழ்விக்க வேண்டும் என எண்ணிய அமினா, அதற்கான தேடலில் பலவகைகளில் ஈடுபட்டார். இறுதியாக, ஆடு,மாடுகளை வளர்க்கும் பண்ணை தொழில் செய்துவரும் ஸ்காட் ஆன்டர்சனை தேடி கண்டுபிடித்தார்.
குழந்தை லைலாவை பார்க்கவந்த ஸ்காட்டுக்கு அமினா ஹார்ட் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அண்ணலின் மனநிலையே அமினாவின் மனநிலையுமாக இருந்ததையடுத்து, ‘கண்ணும் கண்ணும் பத்திக்கொள்ள, காதல் வந்து ஒட்டிக்கொள்ள’ குழந்தை லைலாவை சாட்சியாக வைத்து ஸ்காட்டும், அமினாவும் தற்போது சட்டபூர்வ தம்பதியராக மாறியுள்ளனர்.
இவர்கள் வாழ்வில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மூலக்கதையாக்கி திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.