நாயகன் அஸ்வின் குமார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நாயகி மனிஷா ஜித் அந்த கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார். நாயகியை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின் குமார். அதேவேளையில், அதே கல்லூரியில் படிக்கும் சஞ்சய்யும் நாயகி மீது ஆசை கொள்கிறார்.
தேர்தலில் அனைவரும் நேரில் சென்று வாக்களிக்க விரும்பாததுதான் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகவில்லை என்று நினைக்கும் நாயகன், இணையதளம் மூலமாகவே வாக்களித்தால், 100 சதவீதம் வாக்குப்பதிவை சாத்தியமாக்கலாம் என்ற முயற்சியில் ஒரு புதிய புராஜெக்ட் செய்கிறார். அதில் வெற்றியும் அடைகிறார்.
தனது புராஜெக்டை கல்லூரி முதல்வரிடம் காட்டி அதை நிறைவேற்றுமாறு முறையிடுகிறார். ஆனால், அவரோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில், கல்லூரிக்கு தேர்தல் வருகிறது. அரசியல்வாதியின் மகனான சஞ்சய், அரசியலில் முக்கிய புள்ளியாக நினைக்கிறார். ஆனால், அவர் கல்லூரி தேர்தலில் ஜெயித்தால் அவருக்கு அரசியலில் முக்கிய இடம் கொடுக்க சஞ்சய் அப்பா இருக்கும் கட்சி கூறுகிறது.
மறுமுனையில், நாயகனின் புராஜெக்டை நிராகரித்த கல்லூரி நிர்வாகம், அதே புராஜெக்டை கல்லூரியில் நடக்கும் தேர்தலுக்கு பயன்படுத்த நினைக்கிறது. நாயகனையும் சஞ்சய்க்கு எதிராக அந்த தேர்தலில் களமிறங்க வைக்கிறது. இந்த கல்லூரி தேர்தலில் நாயகனின் புராஜெக்ட் கதாநாயகனாக விளங்கியதா? கல்லூரி தேர்தலை மையப்படுத்தி அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கும் சஞ்சய் திட்டம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் குமார் கல்லூரி மாணவனாக அழுத்தமாக மனதில் பதிகிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிக்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
அரசியல்வாதியின் பையனாக வரும் சஞ்சய்யும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் பெரிய கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் வெளிவந்த படம் கண்டிப்பாக தேர்தலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பலாம். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம். இணையதளம் வாயிலாக இளைய தலைமுறையில் 100 சதவீத வாக்குப்பதிவை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை இப்படம் மூலமாக சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கோபிநாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆரோவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘இணைய தலைமுறை’ வளரும்.