பெரிய கோடீஸ்வரரான ராஜூவின் மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்படவே, வேறு வழியின்றி அருகிலிருக்கும் சாதாரண மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயே, ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கே இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் ராஜூ தனது மனைவியையும் குழந்தையும் கூட்டிக் கொண்டு சென்றுவிடுகிறார்.
பின்னர் சில வருடங்களுக்கு பிறகு கதை ஆரம்பிக்கிறது. ஆட்டோ டிரைவரின் மகனும், கோடீஸ்வரரான ராஜூவின் மகனும் ஒரே பள்ளியில் ஒரே பெயருடன் படித்து வருகிறார்கள். இந்நிலையில், தொழில் போட்டியில் ராஜூவின் மகனை கடத்த பவர் ஸ்டார், ரோபோ சங்கர் அடங்கிய காமெடி கடத்தல்காரர்களிடம் பொறுப்பு வருகிறது. ஆட்டோ டிரைவரின் மகனின் பெயரும், கோடீஸ்வரன் ராஜூவின் மகனும் ஒரே பெயர் என்பதால், குழப்பத்தில் அந்த கடத்தல் கும்பல் ஆட்டோ டிரைவரின் மகனை கடத்திச் சென்றுவிடுகின்றனர்.
பின்னர், அவர்களுக்கு தாங்கள் கடத்தியது தவறான குழந்தைதான் என்று தெரிய வருகிறது. அதன்பிறகு, அவர்கள் கடத்தியது கோடீஸ்வரனின் மகன்தான் என்று ஒரு டுவிஸ்ட் வருகிறது. இது எப்படி சாத்தியமாகும்? அது உண்மைதானா? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.
கோடீஸ்வரனாக வரும் ராஜூ அறிமுகமாகும் படம் இதுதான் என்றாலும், திமிர் பிடித்த கோடீஸ்வராக நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கடைசியில், கோடீஸ்வர திமிரை எல்லாம் விட்டுவிட்டு திருந்தும் காட்சிகளில் இவரது நடிப்பு பலே. ஆட்டோ டிரைவராக வருபவர் நடிப்பில் எதார்த்தம் காட்டியிருக்கிறார். மகன் மேல் பாசம் காட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ரோபோ சங்கர், மகாநதி சங்கர், வடிவேல் பாலாஜி, கிரேன் மனோகர், பவர் ஸ்டார் சீனிவாசன் என மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளமும் உள்ளது. ஆனால், ஒரு சில காட்சிகளைவிட பெரும்பாலான காட்சிகள் நகைச்சுவை இல்லாமலேயே நகர்வது சற்று சலிப்பை தருகிறது.
இயக்குனர் சிவா குழந்தைகளுக்கு கருத்து சொல்லும்படியான ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். பணம் இருந்தால் மட்டும் ஒரு குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக வந்துவிட முடியாது என்பதையும் இப்படத்தில் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
கார்த்திக் ஆச்சார்யா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான். அசோக் ஒளிப்பதிவு சற்று படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சுட்ட பழம் சுடாத பழம்’ கொஞ்சம் புளிக்கிறது.