போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ் இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக இருக்கிறார். கேட்டரிங் நடத்தி வரும் நயன்தாராவும் அதே குணம் கொண்டவராக இருக்கிறார். இவரது அப்பா ஜெயப்பிரகாஷ் வருமான வரித்துறையில் பணியாற்றியவர். உயரதிகாரியை கொலை செய்தார் என்பதற்காக அவரை போலீஸ் தேடுகிறது. இதனால், அவர் நயன்தாராவை விட்டு தலைமறைவாகவே இருக்கிறார்.
ஒருபக்கம் போலீஸ் அவரை கைது செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மறுமுனையில் ரவுடிக் கும்பல் ஒன்றும் ஜெயப்பிரகாஷை தேடி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவை அப்பா இல்லாமல் கஷ்டப்படுவதை பற்றி கேள்விப்பட்ட வெங்கடேஷ், அவள்மீது இரக்கப்பட்டு, தான் போலீஸ் என்பதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவளுக்கு உதவி செய்கிறார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இந்நிலையில், ஜெயப்பிரகாஷின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பார்ப்பதற்காக வரும் ஜெயப்பிரகாஷை கைது செய்கிறார் வெங்கடேஷ்.
தன்னுடைய அப்பாவை கைது செய்வதற்காகத்தான் வெங்கடேஷ் நல்லவன் போல் நாடகமாடினான் என்பதை அறிந்து நயன்தாரா, வெங்கடேஷ் மீது கோபம் கொள்கிறார். உண்மையில் ஜெயப்பிரகாஷ்தான் கொலை குற்றத்துக்காகத்தான் தலைமறைவாக இருந்தாரா? ரவுடிக் கும்பல் அவரை தேட காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
முதல்பாதி முழுக்க தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் நடித்திருக்கும் வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரொம்ப மெனக்கெடுத்து நடித்திருக்கிறார்.
நயன்தாரா தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். நகைச்சுவை காட்சிகளாட்டும், ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். பிரம்மானந்தம் காமெடி ரசிக்க வைக்கிறது. சம்பத் ரவுடி வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் பொறுப்பான அதிகாரியாகவும், பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிகிறார். முரளி சர்மாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.
பலமுறை பார்த்த கதையையே கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி எடுக்க நினைத்திருக்கிறார் மாருதி தசாரி. ஆனால், பெரிதளவில் எடுபடவில்லை. எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்த காட்சியமைப்புகள் அமைவதால் படம் விறுவிறுப்புக்கு தடை போடுகிறது. ஜிப்ரானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல் ரிச்சர்ட் பிரசாத்தின் ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை இவரது கேமரா அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘செல்வி’ செழிப்பாய் இல்லை.