குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை கேட்டு, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரை போடுகிறார்கள்.
விஜய் சேதுபதி தனது பாஸ்போர்ட்டில் தனது மனைவி பெயரை கார்மேகக் குழலி என்று குறிப்பிடுகிறார். விசா இண்டர்வியூவில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கிறது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
இந்நிலையில், நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவு எடுக்க, அப்போது, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை தயார் செய்யும்படி கூறுகிறார். அந்த நாடக கம்பெனியில் வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட்டை பார்த்து, அதில் குறிப்பிட்டிருக்கும் அவரது மனைவியை பற்றி கேட்கிறார்.
அப்போது விஜய் சேதுபதி, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், விசா எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏஜென்ட் மூலமாக பொய்யான ஒரு தகவலை பாஸ்போர்ட்டில் பதிவு செய்திருப்பதாக கூறுகிறார். இது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று விஜய் சேதுபதியை எச்சரிக்கும் பூஜா தேவாரியா, அந்த பெயரை எப்படியாவது நீக்கிவிடு என்று விஜய் சேதுபதியிடம் கூறுகிறார்.
விஜய் சேதுபதியும் அந்த பெயரை எப்படி நீக்குவது என்று வக்கீலிடம் சென்று ஆலோசனை கேட்கிறார். வக்கீல் அந்த பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அவளை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைத்து, விவகாரத்து வாங்கிவிட்டால் பாஸ்போர்ட்டில் இருந்து பெயரை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.
இதனால், கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்கக்கூடிய பெண்ணை தேடி அலைகிறார். அப்போது, டிவியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் ரித்திகா சிங்கின் பெயர் கார்மேக குழலி என்பதை அறிந்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைக்க போராடுகிறார்கள்.
இறுதியில் ரித்திகா சிங், விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க சம்மதித்தாரா? விஜய் சேதுபதி தனது குடும்ப கஷ்டத்தை தீர்க்க லண்டன் போனாரா? என்பதே மீதிக்கதை.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை இப்படத்தில் சுட்டிக்காட்டி எதார்த்த இயக்குனர் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். பாஸ்போர்ட்டில் எத்தனை முறைகேடுகள் நடக்கிறது. எதிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இப்படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதேபோல், சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது எத்தனை கஷ்டம் என்பதையும் அழகாக காட்டியுள்ளார். அதேநேரத்தில் விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரை கூறிய விதமும் அருமை.
விஜய் சேதுபதி ஒரு இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக இவர் நடிக்கும்போது திரையரங்கமே உற்சாகமடைகிறது. எந்த கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக செய்து முடிக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் செம்மையாக செய்திருக்கிறார்.
‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங்கும், விஜய் சேதுபதிக்கு போட்டி போடும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக வரும் அவரது தோற்றம், ஒவ்வொரு காட்சிக்கும் அவரது முகபாவனை என ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கிறது. விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை இவர் நக்கல் செய்யும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு கியாரண்டி.
கே-யின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. பின்னணி இசையில் தனது முழு பலத்தையும் போட்டு உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ சமூக அக்கறையுள்ள படம்.