தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் முக்கிய தலைவர்களில் 40 பேரை மட்டும் மர்ம நபர்கள் சிலர், கொன்று அவர்களுடைய இதயத்தை எடுத்து சென்று விடுகிறார்கள்.
இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் போலீஸ் குழு, சம்பவ இடத்தில் இருந்த நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோரை பிடித்து வைத்து விசாரிக்கிறது. அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும்தான் அந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
அப்பாவிகளான இவர்களுக்கு பணத்தாசை காட்டி, இவர்களை கொலை செய்ய வைத்தது வேறொரு நபர் என்றும் தெரிய வருகிறது. இவர்களை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர் யார்? எதற்காக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவர் கொலை செய்ய வைத்தார்? என்பதே மீதிக்கதை.
நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து இவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குனர் சுதாகர் சண்முகம் இன்றைய சினிமா உலகில் பெண்களே இல்லாத ஒரு படத்தை தைரியமாக இயக்கியிருக்கிறார். கதையாக இப்படத்தை கேட்கும்போது சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கிறது. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் சுவாரஸ்யத்தையும், திரில்லையும் கொடுக்க தவறிவிட்டார். கொலை, கொலைக்கான விசாரணை என குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால் படத்தை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை.
தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை மாறுபட்ட கோணத்தில் சொன்னவிதம் அருமை.
சீனிவாசன், கணேஷ் பாபு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது பலம் கூட்டியிருக்கிறது. ஜோஸ் பிராங்களின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பெய்யென பெய்யும் குருதி’ புதிய முயற்சி.