தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது. இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார். அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறார்.
சென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை என்று கூறிவிடுகிறார். பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் சிலை என்ன ஆனது என்று பதட்டமாகிறார் தேனப்பன். இதற்கிடையில் சென்னைக்கு வந்த அப்பா காணவில்லை என்று அம்மா தகவல் கொடுக்க, விதார்த் பாரதிராஜாவை தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில், பாரதிராஜாவை விதார்த் கண்டுபிடித்தாரா? தேனப்பனுக்கு சிலை கிடைத்ததா? குமரவேலின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
தவறான ஒருத்தரிடம் இருந்தாலும், நட்பு ரீதியில் அவர் செய்த நன்மைக்காவும் அவருடன் இருக்கும் புரிதலுக்காகவும் அவருடன் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. தான் கொல்லப்பட இருக்கும் நிலையில், அவர் பேசும் நேர்மையான உரையாடலை பேசி சிலிக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் பாரதிராஜா மூலம் நிறைவு பெற்றிருக்கிறது.
தேனப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நல்லவனா, கெட்டவனா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். ரசிகர்கள் மனதில் நிற்கும் படி நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து வரும் குமரவேல், இந்த படத்தின் மூலம், நடிப்பில் புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறார்.
தனக்கென ஒரு பாதை அமைத்து சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த், இந்த படத்தில் நாயகன் அந்தஸ்து இல்லாமல், தந்தைக்கு ஏற்ற மகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் கதையை விட்டு நகராமல் கொடுத்திருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘குரங்கு பொம்மை’ அழகான பொம்மை.