பயந்த சுபாவம் உடைய நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர். பொதுவாக எந்த பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாத விஷ்ணு, சாலையை கடக்கக் கூட மற்றவர் துணையை தேடுபவர். அவ்வாறாக ஒருநாள் சாலையை கடக்கும் போது வண்டியில் வரும் நாயகி கேத்தரின் தெரசாவை பார்க்கிறார்.
பார்த்த முதல் சந்திப்பிலேயே கேத்தரின் மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இந்நிலையில், விஷ்ணுவை பார்க்கும் கேத்தரின் அவரை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் விடுகிறார். இதனால் மகிழ்ச்சியடையும் விஷ்ணு, சூரியிடம் அவளை காதலிப்பதாக கூறுகிறார். இந்நிலையில், அரசு வேலைக்கு தேர்வாகி இருக்கும் கேத்தரின் தெரசாவின் விண்ணப்பமும் இருக்கிறது.
அதைப் பார்த்து குஷியாகும் விஷ்ணு விஷால், அவளது வீட்டு முகவரியை பார்க்க, அது அவரது வீட்டிற்கு, அடுத்த வீடு என்பது தெரிய வருகிறது. இயைதடுத்து தனது குடும்பத்தோடு பெண் கேட்க செல்வது போல சரிபார்ப்புக்காக செல்கிறார். இதையடுத்து கேத்தரினிடம் அவரது காதலையும் தெரிவிக்கிறார். கேத்தரின் அவளது பெற்றோரிடம் பேசச் சொல்ல, அவரது அப்பாவிடம் கேத்தரினை திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறார்.
ஆனால் விஷ்ணுவுக்கு, கேத்தரினை திருமணம் செய்து வைக்க அவளது தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட சில பிரச்சனைகளில் விஷ்ணு பயந்து ஓடியதால் அவருக்கு கேத்தரினை திருமணம் செய்து வைக்க முடியாது. தனது மகளை ஒரு ஆம்பளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறிவிடுகிறார். இந்நிலையில், கேத்தரினும் தன்னை காதலிக்கிறாள் என்பதும் விஷ்ணுவுக்கு தெரிய வருகிறது.
இதனால் அவமானத்துக்கு உள்ளாகும் விஷ்ணு விஷால் அடுத்ததாக என்ன செய்தார்? அவர்களது திருமணத்திற்கு கேத்தரின் தெரசாவின் தந்தை அனுமதி தந்தாரா? கேத்தரின் தெரசாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
பயங்கொள்ளியாக விஷால் விஷாலின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. காதல், நட்பு, காமெடி என அனைத்திலும் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒருசில இடங்களில் மிகைநடிப்பை வெளிப்படுத்துவது போல இருந்தாலும், அதிலும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷ்ணு – கேத்தரின் இடையேயான காதலும் ரசிக்கும்படி இருக்கிறது. கேத்தரின் தெரஸா கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் அவரது வழக்கமான ஸ்டைலில் வந்து செல்கிறார்.
விஷ்ணு விஷாலுடனே பயணம் செய்யும் சூரி அவரது சாயலில் காமெடியில் கலக்கியிருக்கிறார். துபாய் ஷேக்காக வரும் ஆனந்த்ராஜ், விஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அருள்தாஸ் வில்லத்தனத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜேந்திரன் அவரது குரலாலே கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
படத்தில் கதை என்று சொல்லும்படி பெரிதாக இல்லையென்றாலும், காமெடிக்கு முக்கித்துவம் கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படி இருக்கிறது. எனினும் திரைக்கதைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்பது பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. விஷ்ணு விஷால் – சூரி சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. சிம்புவின் பின்னணி வர்ணனைக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜே.லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது.
மொத்தத்தில் `கதாநாயகன்’ சிரிக்க வைக்கிறான்.