வெளியூருக்கு வேலைதேடி வருகிறார் நாயகன் சத்ய மூர்த்தி. அந்த ஊரில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபியிடம் வேலைபார்க்கும் சத்ய மூர்த்தியின் நண்பன், சத்ய மூர்த்தியிடம் நேர்மையாக இருந்தால் இந்த ஊரில் பிழைக்க முடியாது. ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறுவிட்டு, திருட்டு தொழில் நடத்தி வரும் ஜான் விஜய்யிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு ஏற்கனவே ஜான் விஜய்யுடன் 3 பேர் இணைந்து சிறிய அளவில் திருடி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் வந்ததால், அந்த தேர்தலில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கும் மைம் கோபி அதற்காக பணத்தை வாரி வழங்க முடிவு செய்கிறார். மேலும் அந்த பணத்தை சத்யமூர்த்தியின் நண்பனிடம் கொடுத்து அனுப்பவும் திட்டமிடுகிறார். இந்த பண விஷயத்தை சத்யமூர்த்தியிடம் தெரிவிக்க அந்த பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று சத்ய மூர்த்தி, ஜான் விஜய்யிடம் கூறுகிறார்.
இதையடுத்து முழு விவரத்தையும் சத்யமூர்த்தியின் நண்பனிடம் இருந்து வாங்கி, அவனுக்கு ஒரு பங்கு தருவதாக கூறி அந்த பணத்தை திருட முடிவு செய்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மைம் கோபியிடம் வேலை பார்க்கும் மற்றொரு ஆள், அவரது நண்பனான போலீஸ்காரர் அஜய் கோஷ் இருவரம் இணைந்து அந்த பணத்தை திருட முடிவு செய்து பணத்தையும் கைப்பற்றிவிடுகின்றனர்.
இதையடுத்து அஜய் கோஷிடம் இருந்த அந்த பணத்தை நாயகன் சத்ய மூர்த்தி எடுத்து செல்கிறார். சத்யமூர்த்தியிடம் இருந்து பணத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று சத்யமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரத்தில் தனது பணத்தை திருயவர்களை பழிவாங்க முடிவு செய்யும் மைம் கோபியும் அவர்களை தேடி வருகிறார்.
கடைசியில் சத்யமூர்த்தி அந்த பணத்துடன் தலைமறைவானாரா? அல்லது போலீசிடம் சிக்கிக் கொண்டாரா? மைம் கோபி அவரை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அந்த பணம் என்னவானது? ஜான் விஜய் மற்றும் அந்த குழுவில் இருக்கும் மற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க சத்ய மூர்த்தி ஹீரோ காட்டாமல் படத்தின் முடிவில், தான் ஒரு ஹீரோயிசம் காட்டி நடித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தன்னுடன் இருப்பவர்கள் மொக்கை திருடர்கள் என்று தெரிந்தும், அடக்க ஒடுக்கமாக ஒன்றுமே தெரியாதது போல நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
குறைவான காட்சிகளில் வந்தாலும் ஸ்வேதா காயும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைம் கோபி ஒரு அரசியல்வாதிக்கு உண்டான அதிகார தோனியும் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திருடர்களை உருவாக்கி அனுப்பும் ஜாம்பவானாக ஜான் விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். விசாரணை படத்தில் தெறிக்கவிட்டிருந்து அஜய் கோஷ் இந்த படத்திலும் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். இ.ராமதாஸ் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு புதுமையான கதையை திருட்டு என்பதை மையக் கருவாகக் கொண்டு வித்தியாசமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீகாந்தனுக்கு பாராட்டுக்கள். கதைக்களம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் செல்வது சிறப்பு. படத்தில் இடம்பெற்றிருக்கும் டுவிஸ்ட்டுகளும் சிறப்பு. ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கும் ஸ்ரீகாந்தன் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்பது பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது.
வினோத் பாரதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகமாக இருக்கிறது.
மொத்தத்தில் `தப்பு தண்டா’ தப்பு தாண்டா.