டிஸ்கவரி சேனலில் வேலை செய்யும் ஜோதிகா, வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார். அதில் பெண்கள் படும் கஷ்டத்தையும் வேதனையும் உணர்கிறார். இந்நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளும் காதலனின் தாயான ஊர்வசி வீட்டில் திருமணத்திற்கு முன்பே தங்குகிறார். காதலன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ஊர்வசிக்கு துணையாக தங்குகிறார்.
இந்நிலையில், ஊர்வசியிடம் மிகவும் சகஜகமாக பேசி நட்பாக பழகி வருகிறார் ஜோதிகா. ஊர்வசி அவரது பள்ளிப் பருவத்தில் விடுதியில் தங்கி படித்ததாகவும், தன்னுடன் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இரண்டு தோழிகள் இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் ஒரு பிரச்சனையில் மூன்று பேரும் பிரிந்து விட்டதாகவும் கூறி வருத்தப்படுகிறார். இதை கேட்ட ஜோதிகா, பேஸ்புக் மூலம் பிரிந்த நண்பர்களை தேடி கண்டுபிடித்து, பிரிந்த அதே தேதியில் ஒன்று சேர்க்க ஆசைப்படுகிறார்.
பானுப்பிரியா, சரண்யாவை கண்டுபிடித்த ஜோதிகா, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவில்லை என்று அறிகிறார். இவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும் அறிகிறார். இதையடுத்து இவர்கள் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.
இறுதியில், பானுப்ரியா, சரண்யாவை பிரிந்த குடும்பத்தினர்கள், அவர்களின் அருமையை புரிந்துக் கொண்டார்களா? மனம் மாறி அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்தார்களா? அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஜோதிகா, துறுதுறுப் பெண்ணாகவும், நிருபராகவும் நடித்து மனதை கவர முயற்சித்திருக்கிறார். வழக்கமாக இவரது நடிப்பு ஓவராக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உண்டு. இதை, முந்தைய படத்தில் உடைத்தெரிந்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். ஆனால், இப்படத்தில் மீண்டும் ஓவர் ஆக்டிங் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
ஊர்வசி, படத்தில் முக்கியமான கதாபாத்திரம். தனக்கே உரிய வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் போது, மாணவர்களிடையே லாவகமாக பேசி டியூசன் பீஸ் வாங்குவது போன்ற காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார்.
பானுப்ரியா, அரசியல்வாதி நாசருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ஒரு குடும்பப் பெண்ணாக தன் குடும்பத்திற்காக வாழ்வது என நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தன் மகன் மனம் திருந்தி வருந்தும் காட்சியிலும், அவனை சமாதானம் செய்யும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு.
சரண்யா பொன்வண்ணன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்பவர். அதே போல் இந்த படத்தில் அவரது பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, கணவனை நினைத்து புலம்பும் காட்சியில் ரசனை.
மாதவன், ஜோதிகாவின் காதலன். இறுதி காட்சியில் மட்டுமே வருகிறார். 15 நிமிடமே வந்தாலும் இவர் வந்த பிறகுதான் படம் முழுமை அடைந்திருக்கிறது. இந்த 15 நிமிடம்தான் படத்திற்கு பலம்.
நாசர், அவரது மகனாக நடித்திருப்பவர், இருவருமே ஒரு அரசியல்வாதியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் பேசும் வசனங்கள் உடல் மொழி அனைத்தும் சிறப்பு.
பிரம்மன், குற்றம் கடிதல் படம் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர். குடும்ப பெண்களுக்கு அவர்களுடைய வீட்டில், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா. அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறாரா? என்பதை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். இந்த மாதிரியான படம் அவசியமான ஒன்று தான். இதை கொடுத்தத்திற்கு பெரிய கைத்தட்டல். ஆனால், படமாக பார்க்கும் போது அது கேள்வி குறித்தான். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் தொடர்ச்சி இல்லாமல் காட்சிப்படுத்தி, பார்ப்பவர்களை சளிப்படைய செய்திருக்கிறார். கடைசி 15 நிமிடம் மட்டுமே ரசிகர்களுக்கு திருப்தியடைய வைத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவில் வடமாநிலங்கள் அனைத்தையும் காட்சிபடுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மகளிர் மட்டும்’ ஆண்களுக்கான படம்.