கணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் கிராமத்திற்கு ஒதுக்கபுறமாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள ரேஷ்மியின் அம்மாவை அழைத்து வருவதற்காக நாயகியை தனியாக விட்டுவிட்டு சந்தோஷ் இலங்கை செல்கிறார்.
இந்நிலையில், இலங்கையில் நடந்த போரில் ரேஷ்மியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் அறிந்து நாயகன் மீண்டும் ஊர் திரும்பும் வேளையில், இலங்கை வீரர்களிடம் துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்ட ஜெகன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா, பரணி ஆகிய நான்கு பேரையும் காப்பாற்றி தன்னுடன் அழைத்து வருகிறார்.
நான்கு பேரையும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் ஊருக்குள் செல்லும் சந்தோஷிடம், ரேஷ்மி மேனன் இறந்து விட்டதாக அந்த கிராமத்தில் உள்ள சிலர் கூறுகின்றனர். மேலும் அவரது வீட்டில் பேய் இருப்பதாகவும், இரவு நேரத்தில் அங்கிருந்து சில சத்தங்கள் வருவதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு சந்தேகத்தில் இருந்த மொட்டை ராஜேந்திரன், இதனால் மேலும் பீதியடைந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து பேய் ஓட்டுபவரான கோவை சரளாவிடம் உதவி கேட்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் கோவை சரளா, அங்கு பேய் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். இதையடுத்து சந்தோஷை அந்த பேயிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவரது நண்பர்கள் முடிவு செய்கின்றனர்.
கடைசியில் சந்தோஷை காப்பாற்றினார்களா? ரேஷ்மி உண்மையிலேயே இறந்து விட்டாரா? அல்லது ரேஷ்மியின் உடலில் பேய் ஏதும் புகுந்து இருக்கிறதா? சந்தோஷ் பின்னணியில் இலங்கை சென்றிருந்த போது என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு கணவனாக சந்தோஷ் பிரதாப் பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக ரேஷ்மி மேனனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணி என கூட்டாக காமெடிக்கு முயற்சி செய்திருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர்.
காதலுக்கு எல்லையில்லை. பாசத்திற்கு அளவில்லை. யார் என்ன சொன்னாலும் நம்மை நேசிக்கும் ஒருவர் உயிரோடு இல்லை என்றாலும் நம்மோடு இருக்கவே ஆசைப்படுவார்கள் என்பதை இக்கதையின் மூலம் பயத்துடன் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பி.ஜவகர். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
சி.சத்யாவின் பின்னணி இசை ஓரளவுக்கு பயத்தை உண்டாக்குகிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பயமா இருக்கு’ அன்பான பேய்.