நாயகன் தேஜ் சரண்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தேஜின் அம்மா அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் டீச்சராக இருக்கும் ஷிவானி, தேஜை காதலித்து வருகிறார். வழக்கமாக இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில், வீடுகளை அபகரித்து வருபவர், தேஜ் இருக்கும் வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.
இதற்காக வீட்டுக்கு அடியாட்களை அனுப்புகிறார். தன் அம்மா குளிப்பதாக சொல்லி அடியாட்களை அனுப்பி விடுகிறார். அதுபோல், மறுநாள் தேஜின் மாமா வீட்டிற்கு வருகிறார். அவரிடம் அம்மா எங்கே என்று கேட்க, அதற்கு வீட்டிற்குள் சென்று, அம்மா போல் குரல் மாற்றி பேசுகிறார்.
தேஜ், தன் அம்மாவை மறைப்பதற்கு காரணம் என்ன? தேஜின் வீட்டை அபகரித்தார்களா? இதன் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.
பிரபல வில்லன் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோ தனமான நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி, தேஜை காதலிப்பதாகவும், அவரை மேல் பாசத்துடனும் நடித்து ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.
சைக்கோ திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆறுபடையப்பன். தாய், மகன் பாசத்தை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் பெரியதாக படம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் திரைக்கதை தோய்வு ஏற்பட்டிருக்கிறது. பல காட்சிகள் முந்தைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்து கிறது. அடுத்தடுத்து என்ன காட்சிகள் நடக்கும் என்பது யூகிக்க முடிகிறது.
ராம் கோபால் கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையும் எடுபடவில்லை. நாகபுஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
மொத்தத்தில் ‘லாலி’ போலி.