படம் ஆரம்பத்திலேயே நாயகி ரித்விகா மர்ம நபர்களால் கொலை செய்யப்டுகிறார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியலவில்லை.
ஏ.வெங்கடேஷ் பெரிய பங்களா ஒன்றில் வாட்ச் மேனாக வேலை பார்க்கிறார். அந்த பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் விஷ்வந்த், ஆடம்ஸ் மற்றும் விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் அந்த பங்களாவில் அவ்வப்போது தங்கி சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த 4 பேருக்கும் பணம் என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. அதற்காக யாரையாவது கடத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
கடைசியில் பணக்காரரான விஸ்வந்த்தின் அக்கா கணவரை, மிரட்டி பணம் சம்பாதிக்க முடிவு செய்கின்றனர். அதற்காக விஷ்வந்த்தின் அக்காவின் குழந்தையையே கடத்துகின்றனர். பின்னர் விஷ்வந்த்தின் மாமாவை மிரட்டி பணம் கேட்கின்றனர். விஷ்வந்த் அவரது மாமாவுடனேயே இருந்து சந்தேகப்படும்படி ஏதாவது செய்கிறாரா என்பதை கவனிக்கிறான். அப்போது அவர் தனது குழந்தக்காக தனது சொத்து முழுவதையுமே எழுதி கொடுப்பேன் என்று கதறுகிறார்.
இதையடுத்து தனது நண்பர்களை அழைத்து மேலும் சில கோடிகளை கேட்டு மிரட்ட சொல்கிறார் விஸ்வந்த். அதே நேரத்தில் விஸ்வந்த் தனது அக்கா குழந்தை மீது அதீத பாசத்யைும் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தை விஸ்வந்த்தை பார்த்து விட, அந்த குழந்தையை கொலை செய்து விட முடிவு செய்கிறார்கள். ஆனால் விஸ்வந்த் அதற்கு மறுப்பு தெரிவிக்க அவரையும் கொல்ல முடிவு செய்கின்றனர்.
கடைசியில் அவர்களுக்கு பணம் கிடைத்ததா? அல்லது அவர்கள் திட்டமிட்டபடி அந்த குழந்தையை கொன்றார்களா? விஸ்வந்த் அதை தடுத்தாரா? தனது தவறை உணர்ந்தாரா? ரித்விகா ஏன் கொலை செய்யப்பட்டார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஸ்வந்த் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகைப்படுத்தாமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக குழந்தையை கொல்ல முடிவு செய்யும் நேரத்தில், வேண்டாம் என்றுதடுக்கும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆடம்ஸ் அவ்வப்போது காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரித்விகா இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டு, கடைசியில் கொலை செய்யும் நிலைக்கு செல்லும் நண்பர்கள் 4 பேர், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஜே.பி.ஆர். முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், அடுத்த பாதியில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட காட்சிகள் விறுவிறுப்பை கூட்டியிருப்பது ரசிக்க முடிகிறது. என்றாலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதீஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லவிதமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஓநாய்கள் ஜாக்கிரதை’ வேகமில்லை.