குழந்தைகளைக் கடத்தி பல்வேறு தொழிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறார் போலீஸ் அதிகாரி மஞ்சுநாத். இந்த விஷயம் மேலதிகாரிகளுக்கு தெரிந்து அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு திரும்புகிறார் மஞ்சுநாத்.
தன் மேல் ஏற்பட்டுள்ள கலங்கத்தை போக்க, ஒரு குழந்தை கடத்தல் நாடகத்தை நடத்தி, அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி, தனக்கு ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை மாற்ற முயற்சிக்கிறார். இந்த நாடகத்திற்காக 4 திருடர்களை தேடி கண்டுபிடித்து ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், அந்த திருடர்களோ அவருக்கு எதிராகத் திரும்புகின்றனர். இதனால் கோபமடையும் மஞ்சுநாத், அவர்களை அழிக்க நினைக்கிறார். இறுதியில் அந்த 4 திருடர்களை பிடித்தாரா? தன் மேல் உள்ள கலங்கத்தை போக்கினாரா? என்பதே மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சுநாத் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. திரைக்கதை, காட்சி அமைப்பு என்பது போன்ற அடிப்படை விஷயத்தில் கூட புரிதலும், அனுபவமும் இல்லாமல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஜி.ரெட்டி. கதாபாத்திரங்கள் தேர்வு, திரைக்கதை உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை ஆகிய வற்றில் தொழில்நுட்பத்தரம் குறைந்தே காணப்படுகிறது.
மொத்தத்தில் ‘6 முதல் 6’ சுவாரஸ்யம் இல்லை.