கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள பெத்தல் ஏ.ஜி தேவாலயத்தை அவர் பார்வையிட்ட பின்பு இந்த புகைப்படம் வைரலாக பரவியது.
“We Support Ajit Doval”, என்ற ஃபேஸ்புக் குழு இந்த புகைப்படத்தை பகிர்ந்து, பிரகாஷ்ராஜ் ஐயப்பனை விரும்பாத ஒரு கபடதாரி என்று குறிப்பிட்டது.
ஐயப்பன் vs கிறிஸ்தவ கடவுள் சண்டையாக ஆக்க பிரகாஷ்ராஜ் முயற்சிக்கிறார் என்றது அந்த ட்விட்டர் பதிவு.
பல இந்துத்துவ ஆதரவாளர்கள், பிரகாஷ்ராஜ் இந்துக்களை வெறுப்பதாகவும், கிறிஸ்தவத்தை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த நடிகர் கர்நாடகாவில் பல இந்துக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிய ஒரு மோசடிகார மத ஊழியருடன் இணைந்து வழிபட்டு கொண்டிருக்கிறார் என்றது ரமேஷ் ராமசந்திரன் என்கிற ட்விட்டர் பக்கம்.
பிரகாஷ்ராஜ் ஒரு ´கிறிஸ்தவ நாத்திகர்´ என பல ட்விட்டர் பக்கங்கள் அவரை பரிகசித்தன.
அந்த புகைப்படங்கள் தவறான பொருளில் பகிரப்படுவது பிபிசி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
அந்தப் புகைப்படங்கள் உண்மையானதுதான். ஆனால், அவை தவறான பொருளில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
இந்த குழுவும் மற்றும் அவர்களது ட்விட்டர் பக்கங்களும் பிரகாஷ்ராஜ் மசூதியை, குருத்வாராவை மற்றும் கோயிலை பார்வையிட்ட புகைப்படங்களை பகிரவில்லை.
பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் செல்லவில்லை. அவர் பல வழிபாட்டு தலங்களை பார்வையிட்டார்.
பிரகாஷ்ராஜின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் கோயில், குருத்வாரா, மசூதி, மற்றும் தேவாலயத்தில் உள்ள புகைப்படங்கள் காணக்கிடைக்கின்றன.
வரும் பொதுத் தேர்தலை மதவாத தேர்தலாக மாற்றதான் இவ்வாறான செய்தி பகிரப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இது குறித்து அவர் பகிர்ந்துள்ள ட்விட்டில், “நான் தேவாலயம், மசூதி, குருத்வாரா மற்றும் கோயில் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்புகிறேன். ஏனெனில், மதசார்பற்ற குரல் ஒன்றுக்காக அவர்கள் வழியில் பிராத்திக்க அவர்கள் விரும்புகிறார்கள். நான் அதை மதிக்கிறேன். தங்கள் இயல்பை வெளிக்காட்ட ´பக்தர்கள்´ செய்யும் தந்திரங்கள் இந்த நாட்டில் வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளன,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ் ஐயப்பனை நம்பமாட்டார். ஆனால், கிறிஸ்தவத்தை நம்புவார். தன்னை நாத்திகவாதி என்று கருதிகொள்வார் என சமூக ஊடகங்கள் பிரகாஷ்ராஜை குறிவைத்து தாக்கின.
சமூக ஊடகத்தில் அவர் குறித்த ஒரு காணொளியை பகிர்ந்து இது மாதிரி குற்றஞ்சாட்டுகின்றன. அந்த காணொளியில் அவர் சபரிமலைக்கு பெண்களை செல்லவிடாமல் தடுப்பது குறித்து அவர் பேசி இருந்தார்.
“எந்த மதம், பெண்ணை, என் அம்மாவை உள்ளே அனுமதிக்காமல் தடை செய்கிறதோ, அது எனக்கான மதம் அல்ல. வழிபடவிடாமல் என் அம்மாவை எந்த பக்தாள் தடுக்கிறாரோ, அவர் எனக்கான பக்தர் இல்லை. வழிபடாமல் என் அம்மாவை எந்த கடவுள் தடுக்கிறாரோ, அது என் கடவுள் அல்ல” என்று பிரகாஷ்ராஜ் சொல்வது போல அந்த காணொளியில் கேட்கிறது.
சபரிமலை செல்வது தொடர்பாக போராடிய பெண்களுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் கூறிய வார்த்தைகள் இவை.
“நான் கடவுளை நம்புகிறேனா… இல்லையா என்பது முக்கியம் அல்ல. பிறர் நம்பிக்கையை நாம் மதிக்கிறோமா… இல்லையா என்பதுதான் முக்கியம். மதத்தில் அரசியலை கலக்காதீர்கள்” என்று மதம் குறித்த தவறான குற்றச்சாட்டு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
பிபிசியிடம் போலிச் செய்திகள் தொடர்பாக பேசிய பிரகாஷ்ராஜ், எதிர்குரல்களை, ´தேச விரோதி´ஆக, ´நகர்புற நக்சல்கள்´ஆக, ´இந்து விரோதி´ஆக அடையாளப்படுத்தும் போது, இது போன்ற செய்திகள் வைரலாகதான் ஆகும் என்று தெரிவித்தார்.