ஓவினாம் கலைப் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார் தலைவாசல் விஜய். இவருடைய பயிற்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் நாயகன் அஜய். இவருடைய மாணவர்களாக ஆர்த்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
ஆர்த்தியின் தோழி நாயகி சனம் ஷெட்டி. இவர் ஆர்த்தியை சந்திக்க பயிற்சி நிலையத்திற்கு வருகிறார். அப்போது அஜய்யை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். பின்னர் அடிக்கடி சந்திக்கும் போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் விஷயம் சனம் ஷெட்டியின் அம்மா நளினிக்கு தெரியவருகிறது. உடனே அவர் கோபப்பட்டு சனம் ஷெட்டியை கண்டிக்கிறார். ஆனால், இதற்கு அஞ்சாத இவர்கள் காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் திடீரென்று சனம் ஷெட்டி உயிரிழந்து பீச் ஓரத்தில் பிணம் இருப்பதாக நளினிக்கு செய்தி வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சனம் ஷெட்டிதான் என உறுதி செய்து விடுகிறார்கள். இதனால் நளினியும், நாயகன் அஜய்யும் சோகத்தில் மூழ்குகிறார்கள்.
இந்நிலையில் சனம் ஷெட்டி உயிருடன் இருப்பதாக அஜய்க்கு தகவல் வருகிறது. மேலும் ஆர்.டி.ஓ.வாக இருக்கும் கலாபவன் மணி அடைத்து வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது. உடனே அஜய், சனம் ஷெட்டி இருக்கும் இடத்தை தேடி அலைகிறான்.
இறுதியில், கலாபவன் மணியிடம் இருந்து சனம் ஷெட்டியை அஜய் காப்பாற்றினாரா? சனம் ஷெட்டியை கலாபவன் மணி அடைத்து வைப்பதற்கான காரணம் என்ன? அஜய், சனம் ஷெட்டி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஜய், ஓவினாம் கலை பயிற்சியாளருக்கு உண்டான உடல் அமைப்பு பெற்று சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் கடினமாக உழைத்திருக்கிறார். நாயகி சனம் ஷெட்டி, முதற்பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் சோகமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் கலாபவன் மணி. ஆர்த்தி, காதல் சுகுமார், மனோபாலா, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
தற்காப்பு கலையை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பரசுராம். படத்தில் அமைந்துள்ள நகைச்சுவை காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. நல்ல நகைச்சுவை கலைஞர்களை வைத்துக் கொண்டு அவர்களை சரியாக கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார். ஓவினாம் கலையைப் பற்றி கூறிய விதம் அருமை.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் கார்த்திக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘கலை வேந்தன்’ கவலை.