மருத்துவ கல்லூரியில் படிக்கும் துருவ் விக்ரம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு குணாதிசியம் கொண்டவர். நாயகி பனிதா அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சேர்கிறார். அவரைப் பார்த்தவுடன் துருவ் விக்ரம் காதல் வயப்படுகிறார். பனிதா எதுவும் ரியாக்ட் பண்ணாமல் இருக்கிறார். பிறகு இருவரும் வெறித்தனமாக காதலிக்கின்றனர்.
இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, சாதியை காரணம் காட்டி அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை அறிந்து கோபமடையும் துருவ், பனிதாவை அழைத்துவர அவரது வீட்டிற்கு செல்கிறார். தந்தை ஒருபுறம் காதலன் மறுபுறம் என இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் பனிதாவிடம், முடிவெடுக்க 6 மணிநேரம் அவகாசம் கொடுத்துவிட்டு செல்கிறார் துருவ். இதையடுத்து பனிதா என்ன முடிவெடுத்தார்? தந்தையின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
தெலுங்கில் மெகாஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படத்தில் துருவ், அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, ஆனால், அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு துளிகூட குறை வைக்காமால் தனது அபார நடிப்பின் மூலம் ஆதித்ய வர்மாவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இது முதல் படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு துருவ்வின் நடிப்பு அபாரம். விக்ரமின் மகனாச்சே இது கூட பண்ணலேனா எப்படி. துருவ்வின் வாய்ஸ் மிகப்பெரிய பிளஸ்.
நாயகி பனிதா சந்து, அழகு பதுமையுடன் நேர்த்தியாக நடித்துள்ளார். காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு அசத்தல். துருவ்வின் நெருங்கிய நண்பராக வரும் அன்புதாசன் குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். துருவுக்கு அவருக்கு இடையிலான நட்பு படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது,
மேலும் பிரியா ஆனந்த், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் ராஜா, துருவின் பாட்டியாக நடித்துள்ள லீலா சாம்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் கிரிசையா அர்ஜுன் ரெட்டி படத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே ஆதித்ய வர்மாவாக உருவாக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டியை போல் இதிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருப்பது மிகப்பெரிய பிளஸ்.
ஏற்கனவே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் என இரண்டு மொழிகளிலும் வெற்றிகண்டவர் சந்தீப் வங்கா. அவரின் உதவி இயக்குனரான கிரிசையா அதே கதையை தமிழில் ஆதித்ய வர்மாவாக கொடுத்து குருநாதருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். ரதனின் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.
மொத்தத்தில் ‘ஆதித்ய வர்மா’ ரசிக்க வைக்கிறான்.