நடிகர் – கார்த்தி
நடிகை – நிகிலா விமல்
இயக்குனர் – ஜீத்து ஜோசப்
இசை – கோவிந்த் வசந்தா
ஓளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சத்யராஜ். இவர், தாய் சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா என வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போகிறார். இதே சமயம் கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் கார்த்தி, நான்தான் காணாமல் போன மகன் என்று சத்யராஜ் வீட்டுக்கு வருகிறார்.
இங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும், அவரை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்கு கொல்ல நினைக்கிறார்கள்? சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி தானா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, திருடனாகவும், மகனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். திருடனாக மற்றவர்களை ஏமாற்ற செய்யும் சேட்டைகளும், பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் நெகிழ வைத்திருக்கிறது.
டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளாமாக்ஸ் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், காதல் காட்சிகளிலும், அப்பா தவறு செய்தவுடன் வருத்தப்படும் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ.வாக வரும் சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஒரு தந்தை குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பொறுப்புள்ள அப்பாவாக நடிப்பில் பளிச்சிடுகிறார். அமைதியான அம்மாவாக நடித்திருக்கிறார் சீதா. பார்வையிலேயே பேசுகிறார் சௌகார் ஜானகி. இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாரே என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். வழக்கம்போல் அசுரமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார் அம்மு அபிராமி. காமெடியில் கலக்கி இருக்கிறார் அஸ்வந்த். இளவரசு, பாலா, ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
தமிழில் பாபநாசம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப், தற்போதும் குடும்பங்கள் ரசிக்கும் படி தம்பி படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவரிடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அதுபோல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. முதல்பாதியின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அலட்டல் இல்லாமல் இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மேட்டுபாளையம் மற்றும் கோவாவின் அழகை கண்முன் நிறுத்துகிறார்.
மொத்தத்தில் ‘தம்பி’ குடும்பத்தில் ஒருவன்.