ஒரு புதிய உறவின் தொடக்கம் என்பது ஒருவருக்கொருவர் இடையில் உண்டாகும் புரிதலில் ஆரம்பிக்கிறது. இரண்டு நபர் ஒரு புதிய உறவில் இணையும்போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் புரிந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையில் நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கை காலப்போக்கில் வளர்ந்து கண் மூடித்தனமான நம்பிக்கையாக மாறுகிறது. நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு நபர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை அவர் உடைக்கும் போது என்ன நடக்கும்?
நீங்கள் அவரை மன்னித்து விடுவீர்களா அல்லது அவரைப் புறக்கணித்து விடுவீர்களா அல்லது மீண்டும் இரண்டாவதாக ஒரு வாய்ப்பு தந்து அவருடைய அன்பை நிரூபிக்க செய்வீர்களா? இந்த வகை பாதிப்பு காதலர்கள் அல்லது கணவன் மனைவிக்கு இடையில் மட்டுமல்ல, வேறு எந்த உறவிலும் ஏற்படக்கூடும். உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விலகி சென்ற பின் மற்றொருவரை இதேப்போல் நம்புவது அவ்வளவு எளிதல்ல.
ஒரு சில நேரத்தில் தவறான புரிதல் காரணமாக உறவில் பிரிவு ஏற்பட்டால் அதனை தெளிவு படுத்துவது அவசியம். உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு கடினமான செயலாக இருந்தாலும், குறைந்தபட்சம் அவர் கூறிய பொய்யிற்கான காரணத்தை கவனிக்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் ஒரு சுயநல காரணம் இருக்க முடியும் அல்லது உங்கள் துணைக்கு வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்க முடியும். ஆனால் எந்த ஒரு காரணமும் அவர் செய்த செயலை நியாயப்படுத்த முடியாது. ஆனாலும் சில நேரம் சில தவறான புரிதல் இதுப்போன்ற சில செயல்களுக்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக உறவில் பிரிவு ஏற்படலாம். ஆகவே உங்கள் துணை எதற்காக பொய் கூறினார் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். சில நிர்பந்தம் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கலாம்.
உறவில் ஒரு முறை நம்பிக்கையை இழந்த பின்பு, மறுபடி நம்பிக்கையைப் பெறுவது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். ஆகவே உங்கள் துணையிடம் இந்த சூழ்நிலை பற்றி பேசுங்கள். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி விவரிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஒருவருடன் மற்றொருவர் பேசி எல்லாவற்றையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அவருடைய நடத்தையில் உள்ள நேர்மையை கவனியுங்கள். பிறகு இந்த உறவை பாதுகாப்பதா அல்லது கைவிடுவதா என்று யோசித்து முடிவெடுங்கள்.
இந்த உறவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுத்தால் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஒருவரை மற்றவர் மன்னிப்பது. ஒரு முறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது அல்லது வழங்குவது சற்று கடினமான செயல் என்றாலும் மன்னிப்பது மட்டுமே இங்கு சிறந்த வழியாகும். மன்னிப்பதால் அவர் செய்தது சரி என்று ஆகாது. மன்னிப்பது என்பது நீங்கள் உங்கள் துணை செய்ததை மறந்து வாழ முயற்சிப்பது மற்றும் உங்கள் துணை உங்களிடம் கூறிய வார்த்தையை மீறாமல், உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுமாகும்.
நீங்கள் உங்கள் துணையை மன்னித்து விட்டீர்கள். நீங்கள் அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்த பின்னும், மீண்டும் இரண்டாம் வாய்ப்பு கொடுத்த பின்னர், மறுபடி உங்களை முட்டாளாக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. ஒரு உறவில் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றால், மீண்டும் நம்பிக்கையை வழங்குவதிலும் இரண்டாம் வாய்ப்பு தரப்பட வேண்டும். நீங்கள் இன்னும் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தால் அது நிலைமையை மேலும் மோசமாக மாற்றக்கூடும். ஆகவே வருங்காலம் மற்றும் நிகழ்காலத்தை மட்டும் கவனித்து கடந்த காலத்தை பற்றி மறப்பது நல்லது.
உங்கள் நம்பிக்கையை சிதைத்த துணையிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் மனதில் எழும் கவலை மற்றும் உணர்ச்சிகள் பற்றி அவரிடம் வெளிப்படுத்துங்கள். உங்கள் சந்தேகம் எல்லாவற்றையும் பற்றி கலந்துரையாடுங்கள். உங்கள் கோபம் மற்றும் காயம் என்று எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேசியபின், அவற்றை மனதில் ஓரத்தில் வைத்துவிடுங்கள்.
மேலே கூறிய குறிப்புகள் மூலம் உடைந்த உறவை ஓட்ட வைக்க முடியும். இரண்டாம் வாய்ப்பு பெரும் அளவிற்கு உங்கள் துணைக்கு தகுதி இருந்தால், நம்பி இந்த விஷயத்தை செய்து பாருங்கள்.