பெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.
இறுதியில், தனக்கொரு மகன் இருப்பதாகவும், அவன் பெயரில் வங்கியில் ரூ.50 கோடி இருப்பதாகவும், அவன் தற்போது மனநிலை காப்பகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். அவனது கட்டை விரல் ரேகையை வங்கியில் உள்ள லாக்கரில் வைத்தால்தான் அந்த பணத்தை எடுக்க முடியும் என்றும், அவனை தேடிக் கண்டுபிடித்து, அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார்.
இதை, அந்த வீட்டில் தோட்டக்காரனாக வேலை செய்யும் அழகு கேட்டுவிட்டு, தனது மகனான நாயகன் சரண் சக்கரவர்த்தியிடம் சென்று, அவரது மகனை கண்டுபிடித்தால் ரூ.50 கோடியையும் அபேஷ் பண்ணிவிடலாம் என்று யோசனை செய்கிறார். எந்த வேலை வெட்டியும் இல்லாமல், சிறுசிறு திருட்டு வேலைகள் செய்து வரும் நாயகன் இதற்கு சம்மதிக்கிறார்.
அதேவேளையில், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சண்முக சுந்தரத்தின் இரண்டாவது மனைவி, அவளது மகளான நாயகி அகன்ஷ்கா மோகனிடம் சென்று இதைப் பற்றி சொல்லி, அவரது மகனை கண்டுபிடித்து ரூ.50 கோடியையும் கைப்பற்ற நினைக்கிறாள்.
மறுமுனையில், சண்முக சுந்தரத்திற்கு விசுவாசமாக இருந்த நிழல்கள் ரவி, தன்னுடைய விசுவாசத்துக்கு அவர் இறந்த பிறகும் பலனில்லையே என்ற கோபத்தில், அவனது மகனை கண்டுபிடித்து, அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார். இதற்காக, ஒரு ரவுடியின் துணையை நாடுகிறார்.
இந்த மூன்று பேரும் தங்களுடன் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டு, சண்முக சுந்தரத்தின் மகனை தேடி, மனநிலை காப்பகத்திற்குள் வெவ்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நுழைகிறார்கள்.
இறுதியில், சண்முக சுந்தரத்தின் மகனை யார் கண்டுபிடித்தார்கள்? அவர் யார்? யார் கைக்கு அந்த ரூ.50 கோடி கிடைத்தது? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
திருட்டை மையப்படுத்தி ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் விஜய் பரமசிவம். அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில காட்சிகளில் காமெடி ரசிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, கதாபாத்திரங்கள் தேர்விலும் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சுவாரஸ்யமான கதையில் சரியான தேர்வில்லாத கதாபாத்திரங்கள் நம்மை ரசிக்க விடாமல் செய்துவிடுகிறது. இருப்பினும், அனுபவ நடிகர்களான ஒய்.ஜி.மகேந்திரன், சண்முக சுந்தரம், அழகு, நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
மரியா ஜெரால்டு இசையில் படத்தில் அமைந்துள்ள இரண்டு கானா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடி பாடலும் பரவாயில்லை. பின்னணி இசை ஓ.கே.ரகம்தான். கௌதம் சேதுராமன், பதி ஆகியோரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘9 திருடர்கள்’ கூட்டு சரியில்லை.