மனநலம் என்பது பொதுவாக கவனிக்கப்பட வேண்டிய, பேசப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அதுகுறித்த தவறான புரிதல்கள் பரவலாக உண்டு. இங்கே மனநலம் சார்ந்த சில தவறான புரிதல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொகுத்து வழங்குகிறோம்.
புரிதல்: மனநலம் என்பது பொதுவான பிரச்னை அல்ல, குறிப்பிட்ட சில நபர்களுக்கே மனநல சார்ந்த பிரச்னைகள் வருகின்றன.
விளக்கமளிக்கிறார் பூர்ண சந்திரிகா, இயக்குநர் (பொறுப்பு), அரசு மனநல காப்பகம்
விளக்கம்: மனநலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசுவதோ அல்லது மருத்துவரை பார்ப்பதோ இன்னும் இயல்பான ஒரு விஷயமாக மாறவில்லை. இருப்பினும் தற்போது இதுகுறித்த விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். சில பேர் குடும்பத்தினரை அழைத்து வந்து மருத்துவரையும் சகஜமாக அணுகுகின்றனர். பரீட்சை எழுதுகின்ற வளர் இளம் பிள்ளைகள் அவர்களுக்கு தேர்வு சமயத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்திற்காக மருத்துவர்களை தொடர்பு கொள்வது போன்ற சூழல்களும் உள்ளன ஆனால் அதே சமயத்தில் இதுகுறித்து யாருக்கும் தெரியகூடாது என்று சொல்பவர்களும் உண்டு. பதற்றம் போன்ற சூழல்கள் எல்லாமே ரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற பிரச்னைகளை போலதான்.
மனநலம் குறித்த பொது கருத்துகள் என்பது மாறவில்லை ஆனால் அது மாறுவதற்கான பயணத்தை நாம் தொடங்கிவிட்டோம் என்று சொல்லலாம்.
ஒரு முதிர்ந்த மனநல பிரச்னையாக இருந்தால் மட்டுமே மனநல மருத்துவர்களிடம் வரவேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். இந்த பெருந்தொற்று சூழலில் பலருக்கும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும், காய்ச்சல் தலைவலி போன்று மனநலம் சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம் அதேபோன்று அந்த மனநல பிரச்னைகளின் சதவீதமும் மாறுபடலாம்.
புரிதல்: அனைத்து மனநல பிரச்னைகளுக்கும் மனநல மருத்துவரிடம் சென்றால் மாத்திரைகளை வழங்குவார்.
விளக்கம்: சில வியாதிகளுக்கு சில மருந்து மாத்திரைகள் சில காலத்திற்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அதேபோன்றுதான் மனநலம் சார்ந்த பாதிப்புகளும். அந்தந்த பிரச்னைகள் சார்ந்த அணுகுமுறைகள் உண்டு. மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு எடுத்துவுடன் மனநல மருத்துவரிடம்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் பேசலாம் அதன்பின் ஒரு மனநல ஆலோசகரை பார்க்கலாம்.
நாம் மருத்துவர்களிடம் போவதனால் நம்மை யாரும் வித்தியாசமாக பேசிவிடமாட்டார்கள் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் நீங்கள் ஆன்லைன் மூலம் எந்தவித உதவியையும் பெறலாம், ஒரு கிளிக்கில் உங்களுக்கான உதவியை நீங்கள் அடையும் வசதி தற்போது உண்டு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புரிதல்: வருத்தமாக இருப்பதே மனச் சோர்வு அதாவது Depression எனப்படுகிறது
விளக்கங்களை அளிக்கிறார் மனநல ஆலோசகர் யாழினி.
விளக்கம்: வருத்தம், மனசோர்வு இரண்டுக்கும் மத்தியில் நாம் குழம்பிவிடக்கூடாது. வருத்தம் என்பது மனிதர்களுக்கே உரித்தான ஓர் இயல்பான உணர்வு. நாம் வருத்தத்தையும், மனச்சோர்வையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
பலரும் தற்போது கூகுள் செய்துவிட்டு தங்களுக்கு மனசோர்வு உள்ளதாக தாங்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது. உத்வேகம் குறைந்து காணப்படுவது முன்னே இயங்கியது போல ஆர்வமோ அல்லது ஈடுபாடோ அற்ற தன்மை, காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது, சோர்வு, வாழ்க்கை குறித்த நிர்கதியான ஒரு கைவிடப்பட்ட எண்ணம், இவை இரு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து இருப்பது அதுவும் எந்தவித புறக்காரணிகளும் இல்லாமல் இருப்பது போன்ற சூழலை மனச்சோர்வு நோய் என்று சொல்கிறோம். இதையே நான் மேலோட்டமாகதான் சொல்கிறேன். நாமாக நமக்கு Depression உள்ளது என்பதை சொல்வதை முதலில் தவிர்த்து கொள்ள வேண்டும்,
இழப்பு, ஏமாற்றம், அவமானம் போன்ற சூழல்களில் நாம் நிச்சயம் சோகத்திற்குள் செல்வோம் ஆனால் அதை நாம் Depression அல்லது மனச்சோர்வு நோய் என தவறாக நினைக்க கூடாது. வருத்தமாக இருப்பது என்பது குணமுடையும் செயல்பாடுதான். நம்மை பாதித்த அந்த விஷயத்தை நாம் கையாளுவதற்கும் எதிர்காலத்துக்கு நம்மை நாம் தயார்ப்படுத்தி கொள்வதற்கும் அந்த சோக உணர்வு தேவை. எனவே எடுத்தவுடன் எனக்கு மனச்சோர்வு என உடனே சொல்லிவிடக்கூடாது. ஒருவருக்கு மனச்சோர்வு உள்ளது என்பதை மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்.
புரிதல்: ஏதேனும் தோல்வி அல்லது ஏமாற்றம் காரணமாகதான் depression ஏற்படுகிறது
விளக்கம்: Depression என்பது ஒரு பெரிய சொல். ஒருவருக்கு ஒன்றுமில்லாத ஒரு விஷயம் மற்றவருக்கு பெரியதாக தெரியலாம் எனவே அது ஒவ்வொரு தனிப்பட்ட நபர் சார்ந்த விஷயம். அவர்களுடைய தனித்துவம், அவர்களுடைய ஆளுமைத் தன்மை அவர்களுடைய ஆற்றல்கள் அவர்கள் சவால்களை எதிர்கொள்கின்ற விதம், என ஒரு தனிமனிதரை பொறுத்தது. இரண்டாவது வாழ்க்கைச் சூழல்கள், மூன்றாவது உள்ளிருந்து ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் எனவே மனச்சோர்விற்கான காரணங்கள் வேறுபடுகின்றன.
புரிதல்: அதிகப்படியான வேலை செய்பவர்களுக்குதான் Depression என்று சொல்லக்கூடிய மனச்சோர்வு பிரச்னைகள் வரும்
விளக்கம்: மனச்சோர்வு நோய் என்பது இந்த தரப்பு மக்களுக்குதான் வரும் என்பது கிடையாது. இல்லத்தரசிகளுக்கோ, முதியவர்களுக்கோ, குழந்தைகளுக்கோகூட மனச்சோர்வு நோய் ஏற்படலாம். அதற்கான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புரிதல்: மனநல பிரச்னைகள் உள்ளவர்கள் அதீத கடுமையுடன் நடந்து கொள்வது அல்லது மிகவும் அமைதியாக இருப்பது என்ற இருநிலையில்தான் இருப்பர்
விளக்கம்: மன உணர்வில் (mood) மாற்றம் வருவது மட்டுமே மனநல பாதிப்பு என்று சொல்லிவிட முடியாது.
பொதுவாக அனைவருக்குமே கோபம், பயம், சந்தோஷம், பதற்றம், கவலை போன்ற அனைத்து உணர்வுகளும் உண்டு. ஆனால் எப்போது அது நமது இயல்பு வாழ்க்கையை வாழவிடாமல் தொடர்ந்து பிரச்னையாக மாறுகிறதோ அப்போது அது மனநலம் சார்ந்த பிரச்னையாக உருவெடுக்கிறது. தொடர்ந்து அது நமது அன்றாட செயல்பாடுகளை தடுக்கிறது, உறவுகளில் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றால் அது மனநலம் சார்ந்த பிரச்னையாக மாறுகிறது.