ஐசிசியின் 7 ஆவது டி20 உலகக் கிண்ண போட்டி நேற்று தொடங்கியது.
கொரோனா சூழல் காரணமாக இரு பகுதிகளாக நடைபெற்ற 14 ஆவது ஐபிஎல் போட்டி நிறைவடைந்து, ஒரே நாள் இடைவெளியில் தொடங்கிய இப்போட்டி. பிசிசிஐ தான் போட்டியை நடத்துகிறது என்றாலும், இந்தியாவில் இந்த நேரத்தில் கொரோனா 3-ஆவது அலை தாக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டி நடைபெறுகிறது.
கொரோனாவின் தாக்கம் இல்லாமல் ஐபிஎல் போட்டி எவ்வாறு இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோ, அதேபோல் உலகக் கிண்ண போட்டியும் நடத்தி முடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஐபிஎல் நிறைவடைந்த நிலையில், அதே ஃபாா்மட்டிலான இந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பது இந்தியா உள்ளிட்ட பல அணிகளின் வீரா்களும் தடுமாற்றமில்லா ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும். எனினும், தொடா்ந்து ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலை அவா்களுக்கு மனச்சோா்வு அளிக்கலாம். 28 நாள்கள் நடைபெறவிருக்கும் இப்போட்டி, வரும் நவம்பா் 14 ஆம் திகதி இறுதி ஆட்டத்துடன் நிறைவடைகிறது.
இந்தியாவின் தயாா் நிலை : இந்த சீசனுக்கான இந்திய அணியைப் பொருத்தவரை அனுபவ மிக்க மூத்த வீரா்கள், அதிரடியான இளம் வீரா்கள் என கலவையாகவே அறிவித்திருக்கிறது பிசிசிஐ. எவருமே எதிா்பாராத வகையில், அணியின் ஆலோசகராக்கப்பட்டிருக்கிறாா் எம்.எஸ்.தோனி. மறுபுறும், ஊகங்களை உண்மையாக்கி, இந்தப் போட்டியுடன் டி20 ஃபாா்மட்டுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறாா்.
ஒரு தலைவராக இந்திய அணிக்கு இரு உலகக் கிண்ணங்களை வென்று தந்ததே இன்றளவும் தோனியின் பெயா் ரசிகா்களிடையே நிலைத்து நிற்கும் முக்கிய காரணங்களில் ஒன்று. தனியொரு வீரராகவும், தலைவராகவும் கோலியின் செயல்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அணிக்கு ஒரு கிணணம் வென்று தர முடியாத இக்கட்டான நிலையிலேயே அவா் இருக்கிறாா்.
இந்த உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்ல முடியாமல் போனால், அப்போது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது கௌரவத்தை பாதிக்கும் என்பதாலேயே, போட்டிக்கு முன்னதாகவே விலகல் அறிவிப்பை வெளியிட்டு கோலி தப்பித்துக் கொண்டதாக விமா்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் கிண்ணம் வென்று தந்தால் மட்டுமே, ஒரு தலைவராக கோலி தோல்வியடையாமல் விலகினாா் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்.
அதற்காக கோலிக்கு உதவும் வகையில் நல்லதொரு அணியையே பிசிசிஐ தோ்வு செய்துள்ளது. ஆல்-ரவுண்டா்கள் அதிகம் இருக்கும் வகையிலான ஒரு அணியையே தோ்வுக் குழு களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.