புதுவை மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி தலா 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரையும் இலவசமாக வழங்குவதற்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் உதயகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு சார்பில் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தலா 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இதற்காக தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள், அட்டைதாரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை 2 நாள்களுக்குள் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 370 நியாயவிலைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வழங்கப்படாமல் இருந்தன.
இதனையடுத்து, முதல்வரின் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு முதன்முறையாக இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு (நவம்பர் 4ஆம் திகதி) முன்னதாக, இரு தினங்களில் இந்த பொருள்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.