கன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட தகவல்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அவர் சிகிச்சை பெற்று வரும் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக், நடிகரின் உடல்நிலை குறித்து தெரிவித்திருக்கும் தகவல்கள் ஏஎன்ஐயில் வெளியாகியுள்ளது.
அதில், நடிகர் புனித் ராஜ்குமார், இன்று முற்பகல் 11.30 மணிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், அவரது உடல்நிலை குறித்து எதுவும் சொல்ல முடியாது. அவரது உடல்நிலை, மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்போதே மிகவும் மோசமாக இருந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவியதால் அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று காலை, 7.33 மணிக்கு, தனது சகோதரரும், கன்னட நடிகர் சிவா ராஜ்குமார் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படம் குறித்து தனது வாழ்த்துகளை புனித் ராஜ்குமார் சுட்டுரையில் வெளியிட்டிருந்தார்.
பஜ்ரங்கி 2 படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்துகளை வெளியிட்டு ஒரு சில மணி நேரத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.