மழை வெள்ள பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொளத்தூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததுடன் மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருள்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மழை வெள்ள பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதுமட்டுமின்றி மாநகராட்சி சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சமையற்கூடங்களில் மூன்று வேளையும் சமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்.