வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் 3 நாட்களில் இந்தப் படம் ரூ.22 கோடி வசூலித்துள்ளது.
மேலும் இந்தப் படத்தை வாங்கிய தமிழக விநியோகிஸ்தர்கள் லாபமடைந்துள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. மாநாடு படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.
இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், மாநாடு படக்குழு, என் தாய், தந்தை, வெளியிட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிட முடியாது. ஆனால் பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகளில்லையே.
ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடி தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.