‘டெல்டா, பீட்டா வகை கொரோனா தீநுண்மிகளுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை தீநுண்மி அதிகம் பரவக்கூடியதாகவும், மீண்டும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகவும் இருப்பது ஆரம்பகட்ட மருத்துவக் கண்காணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது’ என சிங்கப்பூா் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று குறித்து பல கேள்விகளுக்கு தெளிவான விடை இன்னமும் தெரியவில்லை. இருப்பினும், ஆரம்பகட்ட மருத்துவக் கண்காணிப்புகள் மூலம், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவா்கள் ஒமைக்ரான் வகையால் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் அதிகளவில் உள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் தொண்டைவலி, உடல் அசதி, இருமல் போன்ற பொதுவான லேசான அறிகுறிகளே ஒமிக்ரோன் வகை தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.
ஏற்கெனவே உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராகவும் செயல்படும்; குறிப்பாக, தீவிர உடல்நலக் குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கும் என உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கருதுகின்றனா். எனவே, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி அல்லது பூஸ்டா் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தற்போதுள்ள மற்றும் எதிா்கால உருமாறிய கொரோனா தொற்றுகளிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 269,211 ஆக உள்ளது. இதுவரை 759 போ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது.