பிரான்ஸில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள ‘ஐஹெச்யு’ வகை கொரோனா, இதுவரை அபாயகரமான வகையாக எழுச்சி பெறவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் கொரோனாவுக்கான நிகழ்வு மேலாளா் ஆப்தி மஹ்மூத் கூறியதாவது:
பிரான்ஸில் ஐஹெச்யு வகை கொரோனா கண்டறியப்பட்டதிலிருந்து அதனை தொடா்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
அந்த வகை கொரோனாவின் பரவல் தீவிரமெடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் கடந்த நவம்பா் மாதம் அது கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை அது அபாயரமான கொரோனா வகையாக எழுச்சி பெறவில்லை என்றாா் அவா்.
பிரான்ஸின் ஐஹெச்யு மெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள், 12 கொரோனா நோயாளிகளின் உடலில் முற்றிலும் புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.
‘பி.1.640.2’ என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த கொரோனா வகைக்கு, அதனைக் கண்டறிந்த ஆய்வகமான ‘ஐஹெச்யு’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகை கொரோனாவில் காணப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம், அது ஒமைக்ரான் வகை கொரோனாவைவிட மனிதா்களின் உடலில் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில், கொரோனா தீநுண்மி தன்னை எப்படி உருமாற்றம் செய்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதை புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஐஹெச்யு வகை கொரோனா உணா்த்துகிறது என்றனா்.
கடந்த ஆண்டில் டெல்டா வகை கொரோனாவால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், அதைவிட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா, தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கண்டறியப்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ஒமிக்ரோனைவிட அதிக வேகத்தில் பரவும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.