பிரான்ஸ் நாட்டில் உள்ள பெர்துஸ்நகரை சேர்ந்த ஒரு நபர் தனது மகனை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்தார். அவனை காரின் பின்சீட்டில் அமர வைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மலை குன்றுகள் நிறைந்த பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வானத்தில் இருந்து சுமார் 500 கிலோ எடையுள்ள பசுமாடு ஒன்று கார் மீது ‘டமார்’ என்ற சத்தத்துடன் வந்து விழுந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் நிலை குலைந்து திடீரென காரை நிறுத்தினார். இதற்கிடையே காரின் மீது விழுந்த மாட்டின் கொம்பு கண்ணாடியை குத்தி உடைத்தது. இதனால் காரின் முன்பகுதி மிகுந்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தையும், மகனும் மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
ஆனால், இந்த விபத்தில் அதிக எடையுள்ள பசுமாடு அதே இடத்தில் ரோட்டில் விழுந்து உயிரிழந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சோதனை செய்தனர்.
அதில், சாலை ஓரமாக இருந்த மலைகுன்றின் விளம்பில் நின்றபடி மேய்ந்த போது கால் இடறி மலைஉச்சியில் இருந்து கார் மீது பசுமாடு விழுந்துள்ளது தெரியவந்தது.