19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அவுஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசியாக 2020 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் பங்களாதேஷ் சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டி 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கிண்ணத்தை வென்றது. அவுஸ்திரேலியா 3 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றின.
14 வது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 5 ஆம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் பங்களாதேஷ் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15 ஆம் திகதி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அயர்லாந்துடன் 19 ஆம் திகதியும், உகாண்டாவுடன் 22 ஆம் திகதியும் மோதுகிறது.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் இந்த போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா, ஸ்காட்லாந்து-இலங்கை (குரூப் ‘டி’) அணிகள் மோதுகின்றன.
ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 இடங்களில் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 5 ஆம் திகதி இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கிறது.