நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிய முடிவு எடுத்து இருப்பது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருவரையும் சமரசப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. நீண்ட நாட்களாகவே தனுசுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷ் சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்காக வீட்டை விட்டு வெளியே மாதக்கணக்கில் தங்குவதால் குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட முடியவில்லை. இதுவும் திருமண முறிவுக்கு காரணம் என்கின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழும்படி தனுசுக்கு, நடிகை கஸ்தூரி அறிவுரை வழங்கி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், “விவாகரத்து என்பது பெற்றோருக்கு சரியான முடிவாக இருக்கும், ஆனால், குழந்தைகளுக்கு அது தவறானதாகும். குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருங்கள் என்று பெரியவர்கள் சரியாகச் சொல்லி வைத்து இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
நடிகை ஆர்த்தி கணேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “18 வருட அன்பான வாழ்க்கை வீணாகக்கூடாது. எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில்தான் முடியும் என்பது உண்மை அல்ல. இந்த சிறிய பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து விட்டுக்கொடுத்து உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்து உள்ளார்.