2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் விசாரணையை மார்ச் 23ம் திகதி தொடங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொடை கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அமில பிரியங்கர என்ற இளைஞரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரால் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.