தாய்லாந்தில் நீளமான ராஜ நாகத்தை தன்னார்வ ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்துள்ளார். இதுகுறித்த விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தாய்லாந்தின் தெற்கு பிராந்தியமான கிராபியில் பாம்பு ஒன்று பனை தோட்டத்திற்கு ஊர்ந்து சென்று கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் மறைந்து கொள்ள முயற்சிகிறது. இதை பார்த்த மக்கள், ஊர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆவோ நாங் துணை மாவட்ட நிர்வாக அமைப்பின் தன்னார்வலரான சுதீ நவ்ஹாத், கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் போராடி பாம்பை பிடித்தார்.
முதலில் பாம்புக்கு போக்கு காட்டி திறந்த சாலைக்கு கொண்டு வந்த அவர், பின்னர் அதை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பேஸ்புக்கில் இதுகுறித்து அவர் வெளியிட்ட விடியோவில், சுதீ மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பாம்பு சாமார்த்தியமாக தடுக்கிறது.
ஒரு கட்டத்தில், அவரை கடிக்க பாம்பு முற்படுகிறது. ஆனால், நல்வாய்ப்பாக அதை முறியடிக்கிறார். இறுதியாக, அந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டுவிட்டார்.
இந்த பரபரப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், “ராஜ நாகம் பிடிபட்ட பிறகு அது இயற்கை வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. சமீபத்தில் மற்றொரு நாகப்பாம்பு உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டதால், பாம்பு தன் துணையை தேடிக் கொண்டிருந்திருக்கலாம்” என்றார்.