கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் திகதி தொடங்கி மார்ச் 7-ம் திகதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்.20ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் 5 மாநில தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் பாஜக முக்கிய போட்டியாளராக இல்லையென்றாலும், அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் இடையே தான் அதிக போட்டி நிலவி வரும். இந்த முறை இந்த இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, ஆம் ஆத்மி வெற்றி பெற உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதமாற்றம் தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், மதம் என்பது தனிப்பட்ட விஷயம். கட்டாய மத மாற்றங்களுக்கு எதிராகக் கண்டிப்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும், ஆனால் இதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்படக் கூடாது.
ஒருவரை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வது தவறானது. அதைத் தடுக்கும் வகையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி வழிபட உரிமை உண்டு என்று அவர் கூறியுள்ளார்.