தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக நடந்து வந்தது.
வழக்கின் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.