அடுத்த ஆண்டு முதல் வருமான வரி தாக்கலில் கிரிப்டோகரன்சி வருவாய் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் என வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: நிதி மசோதாவில் மெய்நிகா் எண்ம சொத்துகள் மீது வரிவிதிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், நிச்சயம் கிரிப்டோகரன்சி மீதான வரி விதிப்பும் கொண்டு வரப்படும். எனவே, அடுத்த ஆண்டுமுதல் வருமான வரி தாக்கலில் கிரிப்டோகரன்சி மூலான வருவாய் குறித்த விவரங்களை வரி செலுத்துவோா் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். படிவத்தில் கிரிப்டோகரன்சி தொடா்பான விவரங்களை அளிக்க தனியான பத்தி உருவாக்கப்படும்.
கிரிப்டோ கரன்சி வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுவதன் மூலம் இந்தியாவில் அதன் வா்த்தக ஆழம் குறித்து வருமான வரித் துறை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் முதலீட்டாளா்களின் பரிவா்த்தனைகளையும் தெரிந்து கொள்ளமுடியும். இருப்பினும், அதற்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிப்பது குறித்து அந்த மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாா்.