மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு காலங்களில் மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் இடைவிடாது இயங்கி புதுவைக்கு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வந்துகொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக மின்துறையும் புதுவை மக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறது.
இக்கட்டான காலகட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் பயனீட்டு கணக்கீடு, மின் கட்டண பட்டியல் வழங்குதல் போன்றவற்றில் தவிர்க்க முடியாத தொய்வு ஏற்பட்டாலும் மின் பயனீட்டு கணக்கீடு, மின்கட்டண பட்டியல் வழங்குதல் போன்ற பணிகளை மின்துறையானது மேற்கொண்டு வருகிறது. பெரும்பான்மையான மின் நுகர்வோர்கள் தங்களுடைய மாதாந்திர மின்கட்டணத்தை சிரமத்துக்கு இடையில் செலுத்தி வந்தாலும் சில மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை கட்ட முன்வரவில்லை.
இதன் காரணமாக மின்சார கட்டண சுமை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மின்கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாதாந்திர மின் நுகர்வு கட்டணத்தையும் காலத்தோடு செலுத்த வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்நுகர்வோர்களின் வசதிக்காக அவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே கைப்பேசி அல்லது கணினி மூலமாக இணையதள வசதிகளை பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்படி மின்துறையின் https://pedservices.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். மேலும் செல்போன் செயலிகளான பீம், ஜிபே, பே.டி.எம்., அமேசான் பே மூலமாகவும் மின்கட்டணத்தை செலுத்தலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.