ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உச்சகட்ட தயார் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு ஜனாதிபதி விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருவதால் புதின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷாய்கு மற்றும் முப்படை தளபதி வேலரி ஜெராசிமோவுடன் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சந்திப்பில் விளாதிமீர் புதின் பேசியதாவது:
ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ உறுப்பு நாடுகளின் முக்கியத் தலைவர்கள் மிகக் கடுமையான அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
எனவே, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட தற்காப்புத் தளவாட அமைப்புகளை உச்சகட்ட தயார் நிலையில் வைத்திருக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் முப்படை தளபதிக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதாரத் தடைகளுடன் நேட்டோ அமைப்பின் செயல்பாடுகள் நின்றுவிடவில்லை என்று விளாதிமீர் புதின் கூறினார்.
ஏற்கெனவே, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதை புதின் கடந்த வியாழக்கிழமை அறிவித்தபோது, அந்த நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை காணாத மிக மோசமான எதிர்விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது என்று விளாதிமீர் புதின் அப்போது எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளும் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விளாதிமீர் புதின் மீதும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
ஒரு நாட்டின் தலைவர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது மிகவும் அபூர்வமாகும். இதுவரை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸ்ண்டர் லுகஷென்கோ, சிரியா அதிபர் அல் அஸ்த் ஆகியோர் மீது மட்டுமே அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடத்திய மாநாட்டில், உக்ரைன் மீது படையெடுக்கும் முடிவை ரஷ்யா உடனடியாகக் கைவிட்டு, அங்கிருந்து திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைகளைப் பாதுகாக்க முழு ராணுவ பலமும் பயன்படுத்தப்படும் என்று அந்த நாடுகள் சூளுரைத்தன.
ஆனால், உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் எண்ணமில்லை என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் கூறினார். எனினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட் உதவிகளை அளிக்கப்போவதாக அந்த அமைப்பும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.
இந்தச் சூழலில், தங்களது அணு ஆயுதங்களை உச்சகட்ட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று ஜனாதிபதி புதின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, தங்களுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடுகளாக திங்கள்கிழமை அங்கீகரித்தது. மேலும், அந்தப் பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி தனது படையினரை ரஷ்யா அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக, கிழக்கு உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் ராணுவ பலத்தை முடக்குவதாகக் கூறி, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் வியாழக்கிழமை முதல் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுத் தாக்குலை நடத்தி வருகிறது.
ரஷிய சிறப்புப் படை வீரர்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.