உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்த வருகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதனிடையே போரை நிறுத்துவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவின் அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா குறைத்துள்ளது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கீவ்- வாசில்கோவ் சாலை வழியாக மக்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீவில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.