பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு இது 100 வது டெஸ்ட் ஆட்டம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடருக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கோலிக்கு முக்கியமான டெஸ்ட் ஆட்டம் என்பதால், இதைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது விமர்சனத்தை எழுப்பியது.
இந்த நிலையில், கோலியின் 100 வது டெஸ்ட் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது: இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மொகாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறாது. ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த முடிவை மாநில கிரிக்கெட் சங்கங்கள் எடுக்கும். தற்போதைய சூழல்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படுகிறது.
பஞ்சாப் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் நான் பேசினேன். 100 வது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் விராட் கோலியின் வரலாற்றுமிக்கத் தருணத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்” என்றார்.
இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் ஆட்டத்தைக் காண 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.