சர்வதேச கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறதா, இல்லை அவ்வப்போது நடைபெறும் பேரவைத் தேர்தல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் கூட, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த 114 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. மார்ச் 7ஆம் திகதிக்கு பின் லிட்டருக்கு ரூ.3 உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.
வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலமாகவே, இந்தியாவின் 85 சதவீத பெட்ரோல், டீசல் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு 100 டாலருக்கும் கூடுதலாக இருந்த கச்சா எண்ணெய் விலை, அதன் பின்னர் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த போதிலும், 2021 ஏப்ரல் மாதம் 63 டாலராக வீழ்ச்சி அடைந்தது. அந்த நேரத்திலும்கூட பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையவில்லை.
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 வீதம் குறைத்து கடந்த 2021 நவம்பர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனாலும்கூட பெட்ரோல் விலை ரூ.100 க்குக் கீழ் குறையவில்லை.
கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதனால், விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
உக்ரைன், ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைக் கடந்துள்ளது. ஆனாலும், இந்தியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாதது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவானது. அரசு பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
விலை நிர்ணயிக்கும் உரிமை பெட்ரோலிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்ட போதிலும், மக்களவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு விலை மாற்றி அமைக்கப்படுவதில்லை. அந்த வகையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின், கடந்த 114 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை.
உக்ரைன் – ரஷ்யப் போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையிலும், உத்தர பிரதேச தேர்தல் முடியும் நாளுக்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. மார்ச் 7 ஆம் திகதி உ.பி. மாநிலத்தில் 7 ஆவது கட்ட தேர்தல் முடிவடைந்த மறுநாளே பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்.
இது தொடர்பாக பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் கூறியதாவது : தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தை எதிர்நோக்கி இருப்பதுபோல், மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடையும் நேரங்களில்கூட, கலால் வரி குறைக்கப்படுவதில்லை. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை.
நாட்டின் எந்தவொரு பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், பெட்ரோல் விலையை உயர்த்தக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அந்த இழப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மார்ச் 7 ஆம் திகதிக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை உடனடியாக உயர வாய்ப்புள்ளது என்றார்.
பெட்ரோல், டீசல் விலை குறித்த விவரம், ஒவ்வொரு நிலையத்திலும் நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அதில் மொத்த விலை மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அந்த நடைமுறையை மாற்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல், டீசல் உற்பத்திக்கான செலவு, மத்திய, மாநில அரசுகளுக்கான வரி விகிதம் உள்ளிட்ட விவரங்களை தனித் தனியாகப் பட்டியலிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்தனர்.