சிதம்பரம், தமிழ்நாட்டில் இருக்கும் கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகராக திகழ்கிறது சிதம்பரம். ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.
திருசிற்றம்பலம் என்ற பெயர் தான், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என இப்போது வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ஆலயம் மிகவும் பழைமையானது, உலக புகழ் வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயம். இனி, தில்லை சிதம்பரம் கோயிலைப் பற்றிய இரகசியங்கள் மற்றும் உண்மைகள் பற்றிக் காணலாம்…
நாட்டிய கடவுள்
மற்ற இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.
108 பரதநாட்டிய சிலைகள்
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடைய இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும்.
கனக சபை
மூலவர் சிலை இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.
நாயன்மார்கள் பாடிய திருத்தலம்
சைவப் பெரியோர்களான நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதால் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளது.
பஞ்சபூதம் – ஆகாயம்
பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் பூசித்து வரப்படுகிறது.
கட்டிடக் கலையின் அற்புதம்
இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
ஆலய நகரம்
இங்கு, நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
நடனராசன்
நடனக் கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
நாட்டியாஞ்சலி
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணமாக வழங்குகின்றனர்.
சோழர்களின் பணிகள்
சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் ஆலயப்பணிகள் பல புரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
அறிய விஷயங்கள் பல அதினும் ஈசனே மூத்த கடவுளாக கருதப்படுவதற்கு ஏற்ப இடமான திருச்சிற்றம்பழமே இது….