முந்தல் கீரியங்கள்ளி மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் கீரியங்கள்ளி – ஆன்டிகம பிரதான வீதியின் 5ம் கட்டை பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்தல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு கீரியங்கள்ளி பகுதியை நோக்கிப் பயணம் செய்த கார் ஒன்று, எதிர்த் திசையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டு வேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் வீதியோரத்தில் இருந்த மின்சார தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த காரை செலுத்திச் சென்ற சாரதியையும், சாரதிக்கு அருகில் இருந்து பயணம் செய்த நபரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக முந்தல் வைத்தியசாலையில் அனுதித்துள்ளனர்.
எனினும், காரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் வீதியில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முந்தல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் – ஆனமடுவ நவகத்தேகம வீதியின் ஆனமடுவ நகரில் நேற்று இரவு (13) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு ஆனமடுவ நவகத்தேகம பகுதியை நோக்கிப் பயணம் செய்த கார் ஒன்று, வீதியில் நடந்து பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுதித்துள்ள போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முந்தல் மற்றும் ஆனமடுவ பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.